புதுடெல்லி, மே 11–
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை. பொருட்களை பதுக்கினால் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி எச்சரித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கூறியதாவது:
நம்மிடம் தற்போது அரிசி, கோதுமை, கடலை, துவரை, மசூர், பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகள் முதலியன அனைத்தும் தேவையை விட பல மடங்கு அதிகமாகவே இருப்பு உள்ளது என்பதை அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். எந்த பற்றாக்குறையும் இல்லை, மேலும் மக்கள் பீதியடையவோ அல்லது உணவு தானியங்களை வாங்க சந்தைகளுக்கு விரைந்து செல்லவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாட்டில் உணவுப் பொருட்களின் இருப்பு தொடர்பான பிரச்சார செய்திகளை நம்ப வேண்டாம். தேவையான அளவைவிட நம்மிடம் ஏராளமான உணவுப் பொருட்கள் உள்ளன. இதுபோன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் அல்லது வணிக நிறுவனங்கள், சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதுக்கல் அல்லது இருப்பு வைப்பதில் ஈடுபடும் எந்தவொரு நபர் மீதும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.