tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

அறிவோம் அபிராமி அந்தாதியை   பாடல்

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்

 

சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே

 

பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்

 

சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி! நின் தண்ணளியே.

 

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் - உன்னை என்றும் வணங்குபவர்கள் வானில் வாழும் தேவர்களும் தானவர்களான அரக்கர்களும்

 

 

சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே - உன்னை என்றும் தியானத்தில் வைத்துச் சிந்திப்பவர் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவனும், நாராயணனுமே

 

பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் - உன்னைத் தன் அன்பால் கட்டிப்போடுபவர் என்றும் அழியாத பரமானந்தப் பொருளான சிவபெருமானே

 

 

பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே - ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த உலகத்தில் உன்னை வணங்கு தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. எங்கள் தலைவியே. அது வியப்பிற்குரியது.

 

 

உன்னை வழிபடுபவர்கள் தேவர்களும், அசுரர்களும்; தியானம் செய்பவர்கள் பிரமனும், மாலும்; உன்னைத் தன் அன்பில் கட்டிப் போட்டுள்ளவர் அழியாத பரமானந்தம் கொண்ட சிவபிரான்; உன்னை தரிசனம் செய்பவர்களுக்கு உன் குளிர்ந்த கருணை எளிதில் கிடைக்கின்றது. ஒரு அதிகாரியையோ, டாக்டரையோ, அரசியல் தலைவரையோ சந்திப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால், அன்னையாகிய உன்னை சிந்திக்கும் அடியவர்களுக்கு எளிதில் அருள் புரிவது வியப்பிற்குரியது. இதையே,

*மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் ...* (திருமாலும், பிரம்மாவும் காணாத அண்ணாமலையாரை நம் போன்ற அடியார்கள் அறிவோம்) - என்கிறது திருவாசகம்

 

(தொடரும் / வளரும்)

 

சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை