தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள பஞ்சபூதத் தலங்கள்,
சங்கரன் கோயில் - மண்,
தாருகாபுரம்- நீர்,
தென்மலை - காற்று,
தேவதானம் - ஆகாயம்,
கரிவலம் வந்த நல்லூர்- நெருப்பு.
இந்திரனின் வாகனமாகிய யானை "கரி' இக் கோயிலைத் தானாகவே சுற்றி வந்து வழிபட்டதால், ""கரிவலம் வந்த நல்லூர்'' எனப்பெயர் பெற்றது. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்பு கொண்டது இத்தலம்! சங்கரன் கோயிலிலிருந்து சுமார் ஏழு கி.மீ தூரத்தில் இராஜபாளையம் செல்லும் சாலையில் கம்பீரமான ராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது இவ்வாலயம்.
இறைவன் ஸ்ரீ பால்வண்ணநாதர். இறைவி ஸ்ரீ ஒப்பனையம்மாள். அமுதம் உண்ட தேவர்களை வெல்வதற்காக அசுரர்கள் பொருட்டு சுக்கிராச்சாரியார் தடாகம் அமைத்து தவமிருந்தார்.
சிவபிரான் அதில் மூழ்கி வனமாக இருந்த அந்த பகுதியில் பால் போன்ற வெண்மை நிற லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதனால் அவர் பால்வண்ணநாதர் என போற்றப் பட்டார்.
ஒப்பனை செய்யாமலேயே ஒப்பனை அழகாய் காட்சி தரும் அம்பிகையை தரிசனம் செய்யும்போது, ஒப்பனையம்மாள் என்ற பெயர் பொருத்தம் தெரியவரும்.
அகஸ்தியர் ஏற்படுத்திய ஸ்ரீ ஆதிசக்தி பீடம் இங்கு சிறப்புற அமைந்துள்ளது.
இலக்குவன் வழிபட்ட இலக்குவனலிங்கம் தனிச் சந்நிதியாக இங்கு தரிசிக்கக் கிடைக்கிறது.
குட்டித் திருவாசகம் எனப் போற்றப்படும் திருக்கருவை கலித்துறை, திருக்கருவை பதிற்றுப்பத்து என்பனவற்றை ஸ்ரீ வரதுங்கராம பாண்டியன் பாடியதும் இத்தலத்தில்தான்.
ஆதிகாலத்தில் பாற்கடலை கடைந்த போது அமிர்தம் வெளிப்பட்டது. அதனை தேவர்கள் உண்டால் நன்மை பயக்கும், அசுரர்கள் உண்டால் அரக்கத்தனம் பெருகி அழிவுநிலை அதிகரிக்கும் என்பதை அறிந்த மஹாவிஷ்ணு, மோகினி அவதாரம் பூண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வண்ணம் பங்கிட்டு அளித்தார். இதனால் வெகுண்ட அசுரர்கள் தம் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்று முறையிட்டார்கள்.
அவர், அவர்களுடைய ஏக்கத்தைப் போக்கும் வகையில் பூலோகத்தில், கருவைப்பதி என்ற தலத்தில் பால் தடாகம் ஒன்றினை உருவாக்கினார். இதைக் கேள்விப்பட்ட தேவர்கள், அந்தத் தடாகத்திலிருந்து அரக்கர்கள் பாலை அருந்தினார்கள் என்றால் அவர்களும் வலிமை பெற்றுவிடுவார்களோ என்று அஞ்சினார்கள். உடனே சிவபெருமானைத் தஞ்சமடைந்தார்கள். அவர் அந்த பால் தடாகத்தால் வரவிருக்கும் ஆபத்தினை உணர்ந்து, ஓர் அந்தணச்சிறுவன் வேடம் புனைந்து அதனுள் மூழ்கி எழ, அது வெறும் நீர்த்தடாகமாக மாற்றிவிட்டது. இதனால் அசுரர்கள் ஏமாற்றமடைந்தனர். இவ்வாறு பால் தடாகத்தில் மூழ்கி, அதனை நீர் தடாகமாக மாற்றியதால் இங்கே கோயில்கொண்டிருக்கும் ஈசன் பால்வண்ணநாதர் என்றும், சுக்கிரன் உருவாக்கிய தடாகம், சுக்கிர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஒருமுறை இந்திரனுக்கும் அவன் மகனுக்கும் வேடர்களாக மாறும்படி சாபம் ஏற்பட்டது. அதைப் போக்கிக்கொள்ள அவர்கள் இத்தலத்துக்கு வந்து பால்வண்ண நாதரை பூஜித்து வந்தனர். இவ்வாறு இவர்கள் பூஜிக்க, இரவுநேரத்தில் யானை ஒன்றும் வந்து ஈசனை பூஜித்தது. மறுநாள் இறைவன் சந்நதிக்குப் போகும்போது ஏற்கெனவே யாரோ பூஜித்துச் சென்றுவிட்டிருந்த அடையாளங்களை இந்திரன் கண்டான். தங்களையும் மீறி யார் இவ்வாறு பூஜித்திருப்பார்கள் என்று அறிந்து கொள்ள இரவில் ஒளிந்திருந்து கண்காணித்தார்கள். அப்போது ஒரு யானை அவ்வாறு பூஜிப்பதைக் கண்டார்கள். உடனே வெகுண்டு அதனைக் கொல்ல அம்பு எய்தபோது அந்த யானை சட்டென்று வெள்ளை யானையாகிய ஐராவதமாக மாறியது.
தன் தலைவனான இந்திரனைத் தேடி வந்த ஐராவதம் தான் பூஜை செய்த தலத்திலேயே அவனைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டது. இறைவன் அருளால் இந்திரனும் அவன் மகனும் சாபம் விலகி அவர்களின் சுய உருவை பெற்றிருந்தார்கள். இந்திரன் சாபம் தீர்ந்ததாலும், யானை (கரி) வலம் வந்து வணங்கியதாலும், இத்தலம் கரிவலம் வந்த நல்லூர் என்று பெயர் பெற்றது. என்பது ஒரு வரலாறாகவும் அறிந்துகொள்ள முடிகிறது.
இதனால் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்திரனும், சயந்தனும் இறைவனை வணங்கிய வண்ணம் நிற்கின்றனர் என மற்றொரு வரலாறும் கூறப்படுகிறது. இச்சரிதத்தை விளக்கும் விதமாக, இங்குள்ள மகாமண்டபம் சுவரில் மூலிகை வர்ண ஓவியங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
ஒப்பனையம்பிகை தபசு வரலாறு:
பார்வதியம்மை பரமசிவனிடத்தில் சகளநிட்கள கோலத்தில் தங்களை தரிசிக்க விரும்புகிறேன், அந்த தரிசனத்தை காட்டியருள வேண்டும் என விண்ணப்பிக்க, சிவமோ அம்மையை பூஉலகம் சென்று களா மரங்கள் நிறைந்த பகுதியில் தவமிருப்பாயாயின், யாம் உனக்கு சகள நிட்கள கோலத்தில் காட்யளிப்போம் என வாய்மொழி அருளுகிறார். அதன்படி அம்மை பூஉலகம் அடைந்து நிட்சேப நதிக்கரையில், களா மரங்கள் நிறைந்த பகுதியில் நின்று ஒற்றைக்கால் தபசு புரிகிறாள். அம்மையின் அந்த தவத்திற்கு இறங்கி சிவபெருமான் சகள நிட்கள சொரூபமான முகலிங்கநாதராக காட்சியளித்தார்.
அம்மை தவசு புரிந்த நிட்சேப நதிக்கரையின், களா மர வனமே, இன்றைய கரிவலம்வந்தநல்லூர் ஆகும். சங்கரன்கோவிலில் கோமதியாக தவமிருந்து சங்கரநாராயணராக காட்சிபெற்ற அம்மை, இந்த கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மையாக தவமிருந்து முகலிங்கநாதர் காட்சிபெற்றாள்.
திருவிழாக்கள்:
சித்திரை பெளர்ணமி அன்று தீர்த்தவாரியும் தொடர்ந்து வசந்த உற்சவமும் விமரிசையாக நடைபெறும்.
ஆவணி மாதம் இங்கு ஆவணித்தபசு விழா கொடியேற்றமாகி, பத்தாம் நாள் தேரோட்டத்துடன் விமரிசையாக நடைபெறும். இதில் பதிமூன்றாம் நாள் ஆவணி மாத பூராடம் நட்சத்திரத்தன்று ஒப்பனையம்பிகை ஒற்றைக்காலில் தவக்கோலம் பூண்டு தபசு இருக்க, சுவாமி இடபத்தில் முகலிங்க ரூபமாக காட்சியளித்து, பின்னர் யானை வாகனத்தில் பால்வண்ணநாதராக காட்சியளித்து அம்மையை ஆட்கொள்கிறார்.
பங்குனி மாதம் இங்கு சுவாமிக்கு கொடியேற்றமாகி, தேரோட்டத்துடன் பன்னிரெண்டு நாள் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இதுதவிர ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, மாசி மாத சிவராத்திரி
ஆகியவைகளும் முக்கிய விழாக்களாக நடைபெறும்.
நம்பிராஜன்
வள்ளியூர்