tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் செங்குளம் இசக்கியம்மன் சிறப்பு*

எங்கள் குலதெய்வம் செங்குளம் இசக்கியம்மன் சிறப்பு*

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் செங்குளத்தில் கோவில் கொண்டு அருள்பாளிப்பவள் 'அருள்மிகு பிளவக்கல் இசக்கியம்மன்'.

   முக்கூடல்-பொட்டல்புதூர் சாலையில் ..இடைகால் விலக்கிற்கு இரண்டுகிலோமீட்டர் கிழக்காகவும்..முக்கூடலில் இருந்து ஐந்துகிலோமீட்டர் மேற்கிலும் இத்தலம் அமைந்துள்ளது.அமைவிடம் செங்குளம் ஆயினும் இக்கோவில் கபாலிப்பாறை கிராமத்துக்கு பாத்தியப்பட்டது.

   அன்னை பார்வதிதேவி உலகை இயக்குபவள் ஆதலால் இயக்கி என்று பெயர்.அதுவே மறுவி இசக்கி என்றாகி இசக்கியம்மன் என்று அழைக்கப்படுவதாக கூறுவர்.

   இல்லை காளியின் யுத்ததேவதைகளில் ஒருவள் தான் இசக்கி என்போரும்..காளி..இசக்கி என்பதெல்லாம் பார்வதிதேவியின் அம்சம் தான் என்றும் பல்வேறு விதமான நம்பிக்கைகள் நிலவுகின்றன.

 இசக்கியம்மன் தென்மாவட்டங்களில் பலநூற்றாண்டுகளாக பரவலாக வணங்கப்படும் நாட்டார் தெய்வம்.இவள் பழையனூர் நீலியின் இருபிறவி வரலாற்றுதொடர்புடையவள்..சிலப்பதிகாரம் உட்பட பல்வேறு இலக்கியச்சான்றுகளும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூற்று.

  மருந்தின் மகத்துவம் போற்றி..மனப்பூர்வமாக ஏற்று..பிணி தீர்த்துக் கொள்வதே..மனிதத்தின் மாண்பு..மருந்தை பிரித்தரிந்து ஆராய்தல் ஞானியரின் கடமை..ஆகவே அன்னையின் திருவடியை சரணடைந்து புற இருள் நீங்கி அக ஓளிபெறுவோம் வாருங்கள்..!

   உக்கிரதெய்வமாக சிவப்புச்சீலை அணிந்து இடக்கையில் குழந்தையையும்..வலக்கையில் திரிசூலத்தையும் ஏந்தி தான் வீரமும்.கருணையும்..இரண்டறக் கலந்த இறைபடைப்பு என்று பக்தர்களுக்கு பறைசாற்றுகிறாள் அன்னை.

    இசக்கியம்மன் குழந்தைவரம் அளிப்பவளாகவும்..பெண்களின் பிரத்தியேக உடற்பிரச்சினைகளை தீர்ப்பவளாகவும் விளங்குகிறாள்.

 குழந்தைப் பாக்கியம் வேண்டி பக்தர்கள் தொட்டில்பிள்ளை எடுப்பு...கோவில் ஆலமரத்தில் வளையல்களை நேர்ச்சையாக கட்டுதல் போன்ற சடங்குகள் பிராத்தனைகள் செய்து ...நிவாரணம் பெறுவர்.

   அம்பாசமுத்திரம்..கடையம்..பாபநாசம் பிரதான சாலையில் இத்தலம் அமைந்திருப்பதால்..அவ்வழியே சாலையில் பயணிப்போர்..உண்டியலில் காணிக்கை செலுத்தி..விபூதியிட்டுக்கொண்டு..வேண்டுதலோடு தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள்..தங்களது பயணதூரம் முழுமைக்கும் இசக்கியம்மன் வழிநின்று காப்பாள் என்ற நம்பிக்கையுடன்..அந்த நம்பிக்கை நிதர்சனந்தான் என்பதற்கு இன்றும் இங்கு நின்று செல்லும் வாகனங்களே சாட்சி.

சாலையோரம் பிரம்மாண்ட ஆலமரத்தின் அடியில் பீடம் கொண்டு அருள்பாளிக்கிறாள் இசக்கியம்மன்.அம்மனுக்கு கற்பகிரகம் தனியாக அமைக்க உத்தேசித்து தற்போதைய பீடத்திற்கு..வடக்குப்புறம் கான்கரீட் தளக்கட்டடம் கட்டப்பட்டது.ஆனால் அருளாளர்களின் வாய்மொழியாக... 'தான் இந்த ஆலமரத்தடி பீடத்தையே விரும்புவதாகவும்..இடம்மாறி அமர விரும்பமில்லை' எனவும் தெரிவித்துவிட..அக்கட்டடம் இப்போது பூஜை பொருட்கள்.‌..தளவாட சாமான்கள் வைப்பறையாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

   இத்திருக்கோவிலில் தைமாதம் மூன்றாம் செவ்வாய் கால்நாட்டப்பட்டு..கடைசி செவ்வாய் கொடைவிழா சிறப்பாக நடைபெறும்.

   பாப்பாக்குடி,கபாலிபாறை,செங்குளம்,இலுப்பைக்குறிச்சி,வழுதூர் போன்ற கிராமமக்கள் தங்கள் உற்றார் உறவினர்கள் புடைசூழ கலந்துகொண்டு கொடைவிழாவை சிறப்பித்து வருகின்றனர்.

   கொடை அன்று காலை கபாலிபாறை வடக்குவாசல் செல்வி ஆலயத்திலிருந்து..பால்குடம்..தொட்டில்பிள்ளை..இசக்கியம்மன் ஆராதனை சீர் முதலியன மேளதாள வாணவேடிக்கை..அருளாளர்களின் குலவையொளி ஆங்கார...ஆதாளியோடு ஊர்வலமாக சென்று செங்குளம் இசக்கியம்மன் ஆலயத்தை அடையும்..பின் பால்குடங்கள் இறக்கப்பட்டு..இசக்கியம்மன் தொட்டில்பிள்ளை வாங்கும் வைபவம் நடைபெறும்..பின் உள்ளே பூஜையும் வெளியே அருளாளர்களின் ஆட்படுதல்களும் தொடரும்..

 மதியக்கொடைக்கு உற்சவ சொரூபத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சுடுமண்சுதை ரூபம்..வருடாவருடம் புதியதாக மாற்றப்படும்..பழைய சொரூபத்திற்கு சாந்தி ஆராதனை செய்து அகற்றி..புதிதாக பரம்பரையாக சிற்பம் செய்யும் வேளாளர் சூலையிலிருந்து உருவேற்றி கொண்டுவரப்படும் சிற்பம் பிரதிஷ்டம் செய்யப்படும்..பின்னர் அம்மன் சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு...ஜொலிக்கும் அலங்காரத்தோடு பக்தர்களுக்கு காட்சிதந்து...பரவசத்தில் ஆழ்த்துவாள்.

   பின் அருளாளர்களிடம் விபூதிக்குங்கும பிரசாதங்களையும்..அருள்வாக்கு..பரிகாரத்தீர்வுகளையும் பெற்று..மனம் நிறைந்த மகிழ்வோடு..வயிறு நிறைக்க அன்னதானப்பந்தல் நோக்கி நகர்வர்.

  மாலைக்கொடைக்கு பந்தல் மேடையில் வில்லிசை முழங்க..ஆலயத்தைச் சுற்றி பக்தர்கள் கற்கள் கூட்டிய அடுப்பில்..பனையோலைகளை எரியூட்டி..அம்பாள் நேர்ச்சைக்காக சர்க்கரைப்பொங்கல் செய்வர்.

    பொங்கல் பொங்கியதும் தலைவாழை இலையால் மூடி அம்மனுக்கு முன் தேங்காய்..பழம்..பத்தி.சூடம்..முதலியவற்றை வைப்பர்.

   கோவிலில் மதியம் போலவே இரவிலும் அருளாளர்கள்..அருள்வாக்கு கூறுவது..எலுமிச்சை..முட்டை சுற்றி எறிதல் போன்ற நம்பிக்கை சார்ந்த சடங்குகளும் நடைபெறும்.

  குழந்தைகளும்..பெண்களும் திருவிழாக்கடைகளில் வர்ணஜால அலங்கார பொருள்வகைகளில் சில்லறைகளை செலவழித்துவிட்டு..அம்மன் அருள் நிரம்ப இல்லம் திரும்புவர்.

    சாமக்கொடைக்கு வில்லிசை ரசிகர்களும்..பெரும்பாலும் ஆண்களும் மட்டும் கலந்து கொள்வர்.

    நள்ளிரவு தாண்டி ஆடு,கோழி பலிகளும்..அசைவப்படையலும்..நடைபெறுகிறது.ஆனால் அது அம்மனுக்கானதல்ல..அம்மனால் அழிக்கப்பட்ட பூதகணங்களுக்கு என்றும்..அம்மனின் பரிவார தெய்வங்களுக்கு என்றும் இருவேறுவிதமான செவிவழிக்கதைகள் கூறப்படுகிறது.பின்னர் படைப்புச்சோறு பக்தர்களுக்கு பகிர்தளிக்க விடியற்காலை கொடைவிழா நிறைவடையும்.இது போன்ற உற்றார் உறவினர்..சொந்தபந்த கூடல் நிகழ்வுகளை..மனதில் அசைபோட்டபடியே..அடுத்த வருட திருவிழா ஏக்கத்தோடும்..அம்மன் அருள் பரவத்தோடும்..இரண்டுங்கெட்டான் மதி மயக்கத்தோடு இசக்கி இருக்க பயமேன் என இல்லம் திரும்புவார்கள் மக்கள்.*

----------------

*அரும்பூர்.க.குமாரகுரு,மயிலாடுதுறை.*