tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் திருவேற்காடு கருமாரியம்மன் சிறப்புகள்

எங்கள் குலதெய்வம் திருவேற்காடு கருமாரியம்மன் சிறப்புகள்

எங்கள் குலதெய்வம் திருவேற்காட்டில் கோவில் கொண்டுள்ள கருமாரியம்மன் ஆவார்.  இந்த கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும். 

 

தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்குக் குறி சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

 

இதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டுவிட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் முதலாவது நாளை தேவிகருமாரித் தினமாகக் கடைபிடிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் புராணக்கதை உள்ளது. எனவே இந்தத் தலத்தின் அம்மனுக்கான சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது

 

 

 

முன்னொரு காலத்தில், வைகுண்டத்தில் வாசம் செய்யும், திருமால் தனது தங்கையான, தேவி கருமாரி அம்மன் திருவேற்காட்டில் அருளாட்சி செய்வதை காண நேரடியாக வருகை புரிந்தார். தமையனின் வருகையால் மனமகிழ்ந்த அம்பிகை, அவரைத் தனது அருகிலேயே, தெற்குத் திசை

நோக்கி நின்றபடியே, திருமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக் கோலத்தில், நவக்கிரகங்களை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அருள வேண்டும் என வேண்டிக் கொண்டார். தமையனும், அப்படியே செய்வதாக, அம்பிகைக்கு வாக்களித்தார். 

 

திருமாலும், தங்கைக்கு வாக்களித்தப்படியே, திருவேற்காட்டில், ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக் கோலத்தில், தெற்குத் திசை நோக்கி நின்றபடியே, பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். அவ்வாறே, திருவேற்காட்டில் அம்பிகையையும், ஸ்ரீநிவாசப் பெருமாளையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்த வேத வியாச முனிவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

 

 

 

• அன்னையின் அருளால் இங்கு வரும் பக்தர்களுக்குத் திருமண வரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி ஆகியவற்றைத் தருகிறது. 

 

• தீராத நோய்களைத் தீர்த்தருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்டு பில்லி, சூன்யம், மனநோய் போன்றவை நீங்கப்பெறுகின்றனர். ராகு கேது கிரக தோசம் உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோசங்கள் விலகுகின்றன. 

 

• பௌர்ணமி தோறும் 108 சுமங்கலி பெண்களால் மாலை வேளையில் 108 திருவிளக்கு பூஜை செய்யப்படுகின்றது.இந்தப் பூஜையைச் செய்பவர்கள் அவரவர் ஈடுபாட்டிற்கு ஏற்ப பலன்களை அடைந்து வாழ்வில் உயர் நிலை பெறுகின்றனர். 

 

• புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு. 

 

• இவை தவிர முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிசேகம், மாலை சாத்துதல், சங்காபிசேகம், கலசாபிசேகம், கல்யாண உற்சவம், பொங்கல் வைத்தல், அங்கப்பிரதட்சணம் , கண்ணடக்கம் ஆகியவை முக்கிய நேர்த்திக் கடன்களாகப் பக்தர்களால் அம்மனுக்குச் செலுத்தப்படுகிறது

 

 

• ஆடிப் பெருந்திருவிழா 

 

• தை மாதம் பிரம்மோற்சவம் 

 

• மாசி மகம் 

 

• நவராத்திரி 

 

• பௌர்ணமி, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு 

 

• தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் ஆகிய சிறப்பு நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்

 

 

திருவேற்காடு தேவாரம் என்ற பாடலில் திருஞானசம்பந்தர் வேற்காட்டுத் தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார். அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு.