மணக்கால் அய்யம்பேட்டை இந்த ஊர் திருவாரூர் கும்பகோணம் சாலையில்
உள்ளது. இந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தது. இங்குள்ளது
வைகுண்ட நாராயண பெருமாள் கோயில்.
வைகுண்ட நாராயண பெருமாள் கோயில் பல்லவர் காலத்தில் கி பி 7 ஆம்
நூற்றாண்டில் கட்டப்பட்டது. சோழர்கள் ஆட்சி காலத்தில் இந்த ஊர்
திருப்பெரு வேளூர், திருப்பெரு வேளூர் விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது.
நாயக்கர் காலத்தில் சிறுவேளூர் அய்யம்பேட்டை என்று அழைக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் தலம் இது. கருவறையில் வைகுண்ட பெருமாள் ஸ்ரீதேவி
பூதேவி தாயாருடன் அமர்ந்த கோலத்தில் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கிறார்.
மேல் இரு கரங்களில் வலது கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன் உள்ளார். இது
மிகவும் அறிய மிகச் சிறந்த சக்தி வாய்ந்த தோரணையை கொண்டுள்ளது. இடது கரத்தில்
சங்கு சங்கரத்துடனும் கீழ் இரு கரங்களில் வரத, அபய முத்திரையுடன்
எழுந்தருளியிருக்கிறார். கோயிலின் பிரகாரத்தில் லட்சுமி குபேரர், ஆஞ்சநேயர்,
மற்றும் சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் உள்ளன.
கிருஷ்ணாவதாரம் முடிந்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கி இருந்தார்.
கலியுகம் தொடங்கி பூமியில் அநியாயங்கள் பெருகின.
பூலோகத்தில் இறைவன் மீண்டும் அவதாரம் செய்ய வேண்டி காஷ்யப முனிவர்
தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர். அங்கு வந்த நாரதர் யாகத்தின்
பலனை யாருக்கு தரப் போகிறீர்கள் என்று கேட்டார். பலனை சாந்தமான
மூர்த்திக்கு தரப்போவதாக சொன்னார்கள். சாந்தமானவர்களை தேடி சென்றார்
பிருகு முனிவர். வைகுண்டம் சென்ற அவரை கண்டுகொள்ளாமல் அனந்த சயனத்தில்
பெருமாள் இருக்க, அவர் மார்பில் எட்டி உதைத்தார் பிருகு முனிவர். திருமால் கோபம்
கொள்ளாமல் அவர் பாதத்தை தடவி கொடுத்தார். இதனால் கோபம் கொண்ட
லட்சுமி பெருமாளை பிரிந்து சென்றார். பின்னர் குழந்தையாக பூமியில் பிறந்து
காட்டிலே ஆகாச ராஜன் என்ற மன்னனால் கண்டெடுக்கப்பட்டு அவரின் அரண்மனையில்
வளர்ந்து வந்தார். மகாலட்சுமி இல்லாமல் வருந்திய பெருமாள் மகாலட்சுமி
ஆகாச ராஜன் அரண்மனையில் பத்மாவதி என்ற பெயரில் வளர்ந்து வருவதை
தெரிந்து கொண்டு அவரைத் திருமணம் செய்து கொள்ள பூலோகம் வந்தார்
ஸ்ரீனிவாசன் என்ற பெயரில். பத்மாவதியை சந்திக்கிறார் ஸ்ரீனிவாசன். இருவரும்
காதல் கொண்டனர். அவர்கள் திருமணம் நடக்க பல கோடிக்கு சீதனம் தர வேண்டும்
என்று மன்னர் நிர்பந்தம் செய்தார். சம்மதம் சொன்ன பெருமாள் குபேரனிடம் கடன் வாங்கி
தனது திருமணத்தை முடித்தார் என்பது நாம் அறிந்த கதை.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் லட்சுமி குபேரனை வழிபட்டு பெருமாள் அவரிடம்
கடன் வாங்கி சென்றதாக ஐதீகம். இழந்த செல்வதை பெருமாள் மீண்டும்
பெற காரணமாக இருந்த தலம் இது.
மார்கழி மாதம் அதிகாலையில் சுக்கிர பகவான் தனது ஒளியால் இத்தலத்தில்
உள்ள வைகுண்ட பெருமாளை தரிசிப்பதாக ஐதீகம். ஜாதகத்தில் சுக்கிர தோஷம்
இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இங்கு வந்து தேங்காய்
தீபம் ஏற்றி வழிபட்டால் சுக்கிர தோஷம் நீங்கும்.வைகுண்ட நாராயண
பெருமாளை வணங்கினால் 90 நாட்களில் திருமணம் கைகூடும்.
காதல் திருமணம் கைகூட வேண்டும் என்று நினைப்பவர்கள் இத்தல பெருமாளின்
காலடியில் ஒரு எலுமிச்சம் பழம் வைத்து அர்ச்சனை செய்து அதன் சாற்றை
அருந்தினால் அவர்கள் பிரார்த்தனை நிறைவேறும். இங்குள்ள லட்சுமி குபேரனை
வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். தீபாவளி அன்று லட்சுமி
குபேர பூஜை குபேர சந்நிதியில் நடக்கும்.
சென்னையில் இருக்கும் டாக்டர் சிவராமன் அவர்கள் கனவில் பெருமாள் தோன்றி
தனக்கு கோயில் கட்டி புதுப்பிக்க கோரியுள்ளார். அதன்படி அவர் இந்த ஊருக்கு
வந்து கிராமத்து மக்களை சந்தித்து எல்லாவற்றையும் விபரமாக எடுத்துரைத்து
கோயிலை புதுப்பித்து கடந்து 2002 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினார்.
திருமாளம் எஸ். பழனிவேல்