கராச்சி,
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப் - டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்தது. 10.1 ஓவர்களில் இந்த ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஐ.பி.எல் தொடர் ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்தது.
தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டன. இதையடுத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகள் வரும் 17ம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக பி.சி.சி.ஐ தெரிவித்தது. மத்திய அரசு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐ.பி.எல். போன்று பாதியில் நிறுத்தப்பட்ட 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி ஐ.பி.எல். போலவே வருகிற 17-ம் தேதி மீண்டும் தொடங்க இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 25-ந்தேதி வரை மொத்தம் 8 ஆட்டங்கள் நடக்க உள்ளன. பாதுகாப்பு அச்சத்தால் தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் பாகிஸ்தான் திரும்புவார்களா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.