tamilnadu epaper

சென்னையில் 100 இடங்களில் மின்வாகன சார்ஜிங் மையம்

சென்னையில் 100 இடங்களில்  மின்வாகன சார்ஜிங் மையம்


சென்னை, மே 1–

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னையில் 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியது: 

மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால், அவற்றுக்கான பொது சார்ஜிங் நிலையங்கள் மிகவும் குறைவாக உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கி.மீ. துாரத்துக்கு ஒரு சார்ஜிங் நிலையமும், நகர்ப்புறங்களில் 3 கி.மீ. துாரத்துக்கு ஒரு நிலையமும் அமைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதை நடைமுறைப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னையில் 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவையை பொறுத்து நகராட்சிகள், பஞ்.களில் 5 முதல் 10 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சார்ஜிங் நிலையங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

தனியார் நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் சார்ஜிங் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன. அவர்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்க தேவையான நிலம் கண்டறிதல், மின்இணைப்பு வழங்குதல் ஆகிய உதவிகள் அளிக்கப்படும். இவை தவிர, ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், வர்த்தக இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க அதன் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்துள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலுார், விழுப்புரம் மாவட்டங்களில் மொத்தம் 472 பொது சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.