tamilnadu epaper

தைப்பூசம்..  காவடி வகைகள்..!

தைப்பூசம்..   காவடி வகைகள்..!

 

 

முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பௌர்ணமி தினத்தையொட்டி தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.

 

தைப்பூச நாளன்று ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் மற்றும் சிவாலயங்களில் திருவிழாக்கள் நடைபெறும். தைப்பூசத்தையொட்டி பால் குடம், காவடி, பாதயாத்திரை என பக்தர்கள் முருகன் கோவில்களுக்குப் படையெடுத்துள்ளனர்.

 

காவடி :

 

முருகன் கோவிலுக்கு செல்லும்போது, காவடியை சுமந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து இறுதியில் கோவிலை அடையும்போது மனதில் உள்ள பாரங்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுகின்றனர். காவடியின் பெயரானது காவடித் தண்டின் இரு பக்கங்களிலும் கட்டப்படும் பொருட்களைக் கொண்டு அறியப்படுகிறது.

 

காவடி வகைகள் :

 

காவடியில் கட்டப்படும் பொருள் பால் என்றால் 'பால்காவடி" என்றும், பழங்கள் எனில் 'பழக்காவடி" என்றும் அறியப்படும். இவ்வாறாக பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, இளநீர்க்காவடி, வேல்காவடி, சர்க்கரைக்காவடி, சர்ப்பக்காவடி, மச்சக்காவடி என காவடியில் பல வகைகள் உள்ளன. அதில் சிலவற்றை இங்கு காண்போம்.

 

இளநீர்க்காவடி :

 

இக்காவடி மட்டும் பழமையான தோற்றம் கொண்டு விளங்குகின்றது. கம்பு அல்லது பனை மட்டையைக் காவடித் தண்டாகக் கொண்டு தண்டின் இரு புறங்களிலும் இளநீர்க் காய்களை கட்டிக்கொண்டு, மேள தாளங்களின்றி 'வேல் வேல்" 'வேல் வேல்" என்று கூறிக் கொண்டு எளிமையான முறையில் எடுத்து வரப்படுகிறது. இளநீர் காவடியில் எடுத்துவரப்படும் இளநீரானது இறைவனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

 

மச்சக்காவடி :

 

மீனைக் காவடியில் கட்டிக்கொண்டு வருவது மச்சக் காவடி ஆகும். மீனை மூன்று இடங்களில் லேசாக வெட்டி, உப்பிட்டு மண் சட்டியில் மஞ்சள் தண்ணீரில் போட்டுக் காவடித் தண்டில் கட்டிக்கொண்டு வருவர். காவடியை எடுத்து முடித்த‌ பின் கோவில் குளத்தில் இடுப்பளவு ஆழத்தில் இறங்கி நின்று காவடித் தண்டில் கட்டப்பட்ட மண் சட்டியைத் தலைக்கு மேலாக தூக்கி ஆட்டும் போது சட்டியில் உள்ள மீன் நீரில் துள்ளி விழும்.

 

சர்ப்பக்காவடி :

 

நல்ல பாம்பினைக் காவடியில் கட்டிக்கொண்டு வந்து காணிக்கை செலுத்துவது சர்ப்பக் காவடியாகும். சர்ப்பக்காவடி எடுப்பவர் கடும் விரதம் இருப்பார்கள். ஊருக்கு வெளியே காட்டினுள் தங்கி ஆறு நாட்கள் உணவருந்தாமல் விரதம் மேற்கொண்டு இறைவனை வேண்டி வழிபடுவார்கள்.

 

ஆறாம் நாள் அவர்கள் கனவில் இறைவன் தோன்றி ஓர் இடத்தைக் குறிப்பிட்டு அவ்விடத்திற்கு பாம்பைக் கொண்டு வருமாறு கூறுவார். விரதம் இருப்பவர் தாரை, தப்பட்டை ஒலி முழங்க அவ்விடம் சென்று பச்சை மண் கலத்துள் பாம்பினை அடைத்து (பாம்பு தானாகவே வெளியே வந்து மட்கலத்துள் புகும் என்பர்) காவடியில் கட்டிக் கொண்டு வருவர். பின் முருகன் கோவிலின் அருகே உள்ள மலைப்பாங்கான அல்லது காட்டுப் பகுதியில் மட்கலத்தை திறந்துவிடுவர். பாம்பு வெளியேறி விடும்.

 

அலகு குத்துதல் :

 

நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.

 

பறவைக் காவடி :

 

அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுவார்கள்.

 

பால் காவடி : 

 

பால்குடம் காவடியாக பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

 

மயில் காவடி :

 

மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

 

கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் முருகன். அஞ்சு (பயம்) முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும் என்று சொல் வழக்கும் உண்டு. ஆறுமுகனுக்கு வேண்டிக்கொள்ளப்படும் பிரார்த்தனைகளில் காவடி எடுப்பது விசேஷமான ஒன்றாகும். காவடி எடுப்பதற்கும் காரணமும் இருக்கிறது. 

 

மிகுந்த பக்திமானான இடும்பன், சூரபத்மனுக்கு போர்க்கலையை போதிக்கும் ஆசானாக இருந்தான். ஆனால் சூரபத்மன் அநேக கொடுமைகள் புரியவே அவனை விட்டகன்று அகத்தியரிடம் வந்து சேர்ந்தான். 

 

அகத்தியர் பொதிகை மலைக்கு வந்து தங்கிய பொழுது தன் சிஷ்யனான இடும்பனை அழைத்தார். தன்னுடைய வழிபாட்டிற்காக, கயிலையில் சிவ சக்தி ஸ்வரூபமாக விளங்கும் கந்தனுக்குரிய சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார். 

 

அகத்தியரின் கட்டளையை சிரமேற்கொண்டு இடும்பன் கயிலாய மலைக்குச் சென்றான். அவர் குறிப்பிட்ட சிவகிரி சக்திகிரி இரண்டையும் தூக்கியெடுத்து காவடி போல் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு பயணிக்கலானான். 

 

ஆனால் முருகப்பெருமானின் விருப்பமோ வேறுவிதமாக இருந்தது. அவ்விரு சிகரங்களும் திருவாவினன்குடியில் நிலைப்பெற்று இருக்க வேண்டும் என்பதற்காக அவர் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். 

 

இடும்பன் தான் வந்த பாதை தடம் தெரியாமல் தயங்கிய சமயம், வேலனானவன் ஒரு அரசனைப்போல் வேடம் கொண்டு, குதிரையின் மீது பவனி வந்தார். எதிரில் வந்த இடும்பனைப் பார்த்து, திருவாவினன்குடிக்கு வந்து சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறகு பயணத்தைத் தொடரும்படி பணித்தார்.  

 

அரச கட்டளை என்று ஏற்ற இடும்பன், இரு சிகரங்களையும் கீழே வைத்துவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டான். கிளம்ப வேண்டிய தருணம் வந்தவுடன், தான் இறக்கி வைத்த சிகரங்களைத் தூக்க முற்பட்டான். ஆனால் அவையிரண்டும் அசைந்து கூடக்கொடுக்கவில்லை. 

 

தன் குருபக்திக்குக் களங்கம் வந்துவிடக்கூடாதே என்று கவலைப்பட்டான். அப்பொழுது சிவகிரியின் மேல் ஒரு சிறு பாலகன் கோவணத்துடன் நிற்பதைக் கண்டான். பாலகனை சிகரத்திலிருந்து இறங்கி விடும்படி இறைஞ்சினான். ஆனால் பாலகன் அச்சிகரம் தனக்குண்டானது என்று கூறி இறங்கி வர மறுத்து விட்டான். எத்தனை கெஞ்சியும் பாலகன் இடும்பனுக்கு பணிய மறுத்து விட்டான். 

 

இடும்பனுக்கு அளவிடமுடியாத கோபம் உண்டானது அதனால் அச்சிறுவனைத் தாக்க முற்பட்டான். ஆனால் முற்பட்ட கணமே வேரற்ற மரம் போல் பூமியில் சாய்ந்தான். சிஷ்யன் வராததைக் கண்ட அகத்தியர், ஞான திருஷ்டியில் நடந்ததை அறிந்து கொண்டார். தன் சீடனைக் காக்கும்படி முருகப்பெருமானிடத்தில் வேண்டி நின்றார். அழகனும் இடும்பனின் பக்தியை மெச்சி அருளாசி புரிந்தார். மேலும் அவனை, தன் காவல் தெய்வமாக அமர்த்திக் கொண்டார். இடும்பனைப் போல் காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதாகவும் அருள் வாக்கினை அளித்தார் அதன் பிறகுதான் முருகப்பெருமானுக்குக் காவடி எடுக்கும் பழக்கம் புழக்கத்தில் வந்தது. 

 

பழனி மலைப்பாதையின் தொடக்கதிலேயே தனியாக ஒரு பாதை செல்கிறது. அதில் சென்றால் காவடி தூக்கிவரும் இடும்பன் சிற்பமும், அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம், வடிவேலர் சந்நிதியும் இருக்கிறது. இவையே தாத்பர்யத்தை விளக்கும் ஆதாரக் கதையாக அமைகிறது. 

 

ஞானப்பண்டிதனுக்கு என்னென்ன காவடிகள் எடுக்கப்படுகின்றன? பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, அக்னி காவடி (முருகனுக்கு பூ மிதித்தல்), சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, இளநீர் காவடி, வேல் காவடி (அலகு குத்திக் கொள்ளுதல்), கரும்புத் தூளி காவடி (தவம் இருந்து குழந்தை பெற்றல்) போன்றவையாகும். 

 

பக்தர்களுக்கு அருள் புரிவதற்காகவே பகவான் அர்ச்சாவதாரியாக எழுந்தருளி உள்ளான். மனமாகிய குகையில் இருக்கும் குகனை நித்தமும் தொழுது, அவன் தொண்டாற்றி பேரின்பம் பெறுவோம். 

 

ஸ்ரீ சுப்ரமண்ய காயத்ரி 

 

தத் புருஷாய வித்மஹே 

மஹா சேனாய தீமஹி 

தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்

ப.சரவணன்.