tamilnadu epaper

பெரியநாயகி அம்மன் சமேத கோணேஷ்வரர் கோயில்

பெரியநாயகி அம்மன் சமேத கோணேஷ்வரர் கோயில்

குலதெய்வ கோவில் ---

 குடவாசல் 

 

 திருவாரூர் மாவட்டத்தில் குடவாசலில் பெரியநாயகி அம்மன் சமேத கோணேஷ்வரர் கோயில்

அமைந்துள்ளது. கும்பகோணம் – திருவாரூர் சாலை வழியில் 15 கி மீ தொலைவில் சாலை ஓரத்திலேயே கோவில் அமைந்துள்ளது.

இது சம்பந்தர் பாடல் பெற்ற தலம் ஆகும். உலக பிரளய காலத்தில் இறைவன் உயிர்கள் அனைத்தையும் அமிர்த குடம் ஒன்றிலிட்டு அக்குடத்தின் வாயிலில் சிவலிங்கமாக இருந்து காத்த தலம் என்பது தொன்நம்பிக்கை. இத்திருக்கோயில் பெயர் குடவாயிற் கோட்டம் என்பதாகும்.

சங்ககாலச் சிறப்பும் பழைமையும் பெற்ற இத்தலம் கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதியுள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்சமூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு எதிரில் அமிர்த தீர்த்தம் உள்ளது. இதன் கரையில் ஆதிவிநாயகர் சந்நிதி உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. 

இடதுபுறம் தெற்கு நோக்கிய பெரிய நாயகி சந்நிதி உள்ளது. அபயவரதத்துடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறாள். அம்பிகையே பிருகத்துர்க்கையாக வழிபடப் பெறுவதால் கோயிலில் தனி துர்க்கையில்லை.

உயிர்கள் அனைத்தும் அழிந்துவிடக் கூடிய பிரளயம் வந்தபோது அனைத்து உயிர்களும் அழிந்துவிடகூடாதே என்று சர்வேஸ்வரன் அமிர்தகுடம் ஒன்றைச் செய்து அதில் உயிர்களையும் அமிர்தத்தையும் வைத்து குடத்தின் முகப்பில் சிவலிங்கமாக இருந்து பாதுகாத்து வந்தார். காலங்கள் கடந்தன. குடத்தின் வாயிலில் இருந்த சிவலிங்கத்தை புற்று மூடியது. அப்புற்று வளர்ந்து பேரிய மலை போல் ஆனது. புற்றால் மூடப்பட்டிருந்த குடத்தை கருடபகவான் மூக்கினால் கொத்தி பிளந்து சிவலிங்கத்தை வெளிபடுத்தினார். 

இதனால் இந்த இறைவனை வன்மீகாசலேசர், கருடாத்திரி என்று அழைக்கப்படுகிறார். அமிர்த துளி விழுந்த இடம் அமிர்த தலமாயிற்று. அமுத நீர் தேங்கிய இடம் அமிர்த தீர்த்தம் ஆயிற்று. உயிர்களை பலகாலம் காத்து வந்ததால் இறைவன் கோணேசர் ஆனார். தன் மூக்கால் கொத்தி ஈஸ்வரனை வெளிக்கொணர்ந்த கருடன், ஈஸ்வரன் அருளால் இந்த ஆலயத்தை கட்டி வழிபட்டார் என்பது புராணம். ஈஸ்வரனால் பாதுகாக்கப்பட்ட அந்த அமிர்த கலசம் தக்க காலம் வந்ததும் மூன்றாக உடைந்தது. 

முதல் பாகமாகிய அடிபாகம் விழுந்த இடம் கும்பகோணமாகவும் ஈசனை ஆதிகும்பேசர் எனவும் அழைக்கப்படலானது. நடுபாகம் விழுந்த இடம் கலயநல்லூர் இன்றைய சாக்கோட்டை ஆகும் இங்குள்ள ஈசன் அமுதகலசேஸ்வரர் ஆவார். குடத்தின் முகப்பு அதாவது வாயில் தங்கிய இடமே குடவாயில்(குடவாசல்) ஆயிற்று. 

காச்யப முனிவரின் இரண்டு மனைவிகளில் ஒருத்தியான விநதை இளையவள். அவளின் மகன் கருடன். மகாவிஷ்ணுவிற்கு வாகனமாகவும், பரம பக்தனாகவும் இருந்து "பெரிய திருவடி" என்று புகழ் பெற்றவர். ஒரு சமயம் கருடனும், அவன் தாய் விநதையும் மூத்த மனைவியின் அடிமையாக வேண்டிய நிலை ஏற்பட்டது. தாயின் அடிமைத்தனத்தை போக்குவதற்காக கருடன் பெரியன்னை கேட்டபடி தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தை எடுத்து வந்தான். பூலோகத்தில் குடவாயிலுக்கு அருகே பறந்து வரும்போது ஒரு அசுரன் எதிர்பட்டு அமிர்த குடத்தை பறிக்க முற்பட்டான். கருடன் அருகிலிருந்த ஒரு பெரிய புற்றின் மீது தர்ப்பைகளைப் பரப்பி, அதன் மீது குடத்தை வைத்துவிட்டு, அசுரனுடன் மூர்க்கமாகப் போர் புரிந்து அவனை வீழ்த்தினார். இதற்குள் அந்த புற்றுக்குள்ளே இருந்த இறைவன் கோணேசப் பெருமான் அந்த அமிர்த குடத்தை மெள்ளத் தம்மிடம் இழுத்துக் கொண்டார். அசுரனை வீழ்த்திவிட்டு வந்த கருடன் அமிர்த குடத்தைக் காணாமல் அந்த புற்றைத் தன் மூக்கால் கிளறியபோது சுவாமி புற்றிலிருந்து வெளிவந்து கருடனுக்கு தரிசனம் தந்தார்.

 கோணேசப் பெருமான் அருளாணைப்படி கருடன் இத்தலத்தில் இறைவனுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பினார். கருடாழ்வார் கொண்டு வந்த அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்படவராதலால் கோணேசர் அமிர்தலிங்கமானார். அமிர்த துளிகள் சிந்தியதால் ஆலயத்திற்கு எதிரிலுள்ள தீர்த்தம் அமிர்த தீர்த்தம் ஆயிற்று. திருணபிந்து முனிவர் பூஜிக்க இறைவன் திருக்குடத்திலிருந்து வெளிப்பட்டு முனிவர் நோயினை நீக்கயருளிய தலம் இதுவாகும். அனுமனும் இத்தல இறைவனை வழிபட்டிருக்கிறார். அவர் திருவுருவங்கள் இங்குள்ளன.

இவ்வூரில் நல்லாதனார், கீரத்தனார் என்ற இரு சங்கப்புலவர்கள் வாழ்ந்தனர். நல்லாதனார் திரிகடுகம் பாடிய புலவர். கணைக்கால் இரும்பொறை என்ற சேரன், சோழன் செங்கண்ணானோடு போர்செய்து குடவாயில் கோட்டத்தில் சிறையில் அடைபட்டுக் கிடந்த செய்தி உள்ளது. வீரன் ஒருவன் தண்ணீர் தர மறுத்ததால், உயிர்துறந்த இரும்பொறையின் மானம் சிறப்புடன் மதிக்கப்படுகிறது.

இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு எதிரே வெளியில் அமுத தீர்த்தம் உள்ளது. இதன் கரையில் சுவாமி சன்னதி பார்த்தபடி "ஆதி கஜாநநர்' என்று அழைக்கப்படும் விநாயகர் இருக்கிறார். சுவாமி சன்னதியில் இருந்து வெளியில் பார்க்கும்போது, இந்த விநாயகரின் விமான கலசம் தெரியும்படியாக கோயில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம். மாசி மகத்தன்று சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் அமுத தீர்த்தத்திற்கு எழுந்தருளி, தீர்த்தநீராடுகின்றனர்.

பிரகாரத்தில் "குடவாயிற்குமரன்' சன்னதி இருக்கிறது. இந்த முருகனை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். இடும்பனுக்கும் சன்னதி உள்ளது. அருகருகே இரண்டு பைரவர் (ஒருவருடன் நாய் வாகனம் இல்லை), சூரியன், சந்திரன் ஆகியோரும் உள்ளனர். இதில் சூரியன் அமர்ந்தும், சந்திரன் நின்ற கோலத்திலும் இருக்கிறார். பெற்றோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் சூரிய, சந்திரனை வழிபட்டு மன அமைதி பெறுகின்றனர்.அருகில் சூத முனிவர், சிவனை வணங்கி தியானம் செய்தபடி இருக்கிறார். நால்வர், பரவை நாச்சியாருடன் சுந்தரர், வீணை இல்லாத சரஸ்வதி, கஜலட்சுமி, சப்தமாதர் ஆகியோரும் உள்ளனர்.

 

 

எஸ்.ரவீந்தி

ரன், பூந்தமல்லி,