ஸ்ரீராமனின் அருள் பெற அனுமனை வணங்கினாலே போதும் என்பார்கள். அந்தளவுக்கு அனுமன் ராமனின் மிக தீவிர பக்தன் ஆவார். அவருக்கு செந்தூரம் பூசுகின்றனர். சீதா தேவி போல் நான் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக் கொள்வதால் தங்களின் ஆயுள் பல காலம் நீடிக்கும் அல்லவா என்றார் அனுமன். எப்படி நடந்தது இது? விரிவாக பார்க்கலாம் வாருங்கள்!
வனவாசம் முடிந்து ஸ்ரீராமனின் ஆட்சியின் கீழ் அயோத்தி மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
ராமனுடனேயே பக்தன் அனுமன் அவருக்கு தொண்டு செய்யும் விதத்தில் அயோத்தியிலேயே தங்கி இருந்தார்.
ஒரு நாள் இரவு அனைத்து பணிகளும் நிறைவு செய்து சீதா தேவியும், ஸ்ரீராமனும் அவர்கள் வசிக்கும் அறைக்கு சென்றனர். முதலில் சீதா தேவி அறைக்குள் நுழைந்தார். ராமனும் நுழைய முயன்ற போது அவருடன் வந்த அனுமனும் அறையில் நுழைய முற்பட்டார். அப்போது ராமர் அவரை தடுத்தார்.
அதற்கு அனுமன், 'சீதாதேவி போல தங்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கும் என்னை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள்?' என்று ஸ்ரீராமனிடம் கேட்டார்.
அனுமனுக்கு தம்பதிகளில் இல்வாழ்க்கை முறையை விளக்க முடியாமல் தவித்த ராமன், அவரை சமாளிக்கும் பொருட்டு, “சீதா தன் நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொண்டுள்ளார் அல்லவா? அதனால் உனக்கு அனுமதியில்லை!” என விளையாட்டாகக் கூறினார்.
இதைக் கேட்டதும், அதில் என்ன பெருமை இருக்கிறது?சீதாதேவி செந்தூரம் அணிந்துள்ளதற்கு காரணத்தை கூறுமாறு ராமனிடம் கேட்டார்.
ராமபிரானோ, 'இதற்கான காரணத்தை நாளை சீதையிடம் நீயே கேட்டு தெரிந்து கொள்' என்றார்.
மறுநாள் சீதாதேவியை தரிசித்த அனுமன், 'ஏன் செந்தூரம் இட்டுள்ளீர்கள்?' என கேட்டார். ஒரு மனைவியானவள் செந்தூரம் இட்டுக் கொண்டால் கணவரின் ஆயுள் நீள வேண்டும் என்பதற்காகவே மனைவி என்ற முறையில் செந்தூரம் இட்டுக் கொண்டுள்ளேன். ஒவ்வொரு திருமணமான பெண்ணும் தன் கணவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக செந்தூரம் இடுகின்றனர்' என்றார்.
இதைக் கேட்டதும் உடனே வேகமாக அங்கிருந்து நேரடியாக கடைவீதிக்குக் கிளம்பி சென்றார். கடைவீதியில் இருந்த செந்தூரத்தை நிறைய வாங்கி தன் முகம் மற்றும் உடல் முழுவதும் பூசிக்கொண்டார்.
மேலும் கடையில் இருந்த செந்தூர மூட்டையை தரையில் கொட்டி அதில் புரண்டு தன் உடல் முழுவதும் படும்படி பூசிக்கொண்டார். அதே கோலத்துடன் மறுநாள் அனுமன் அயோத்தி அரண்மனைக்குச் சென்றார்.
அரசவையில் வீற்றிருந்த ஸ்ரீ ராமன், சீதா தேவி முன் சென்று நின்றார் அனுமன். அனுமனைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே, 'என்ன அனுமான் இப்படி வந்திருக்கிறாய்? என்றார் ஸ்ரீராமன்.
அதற்கு பணிவுடன் பேசிய அனுமன், அன்னை சீதா தேவி நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்வதால் உங்களின் ஆயுள் நீடிக்கும் என சீதா தேவி கூறியதாகவும், அவர் இடும் சிறிய அளவிலான செந்தூரத்திற்கே உங்களின் ஆயுள் நீடிக்கும் என்றால், உங்கள் மீது முழுமையான பக்தியும், எல்லையற்ற அன்பும் வைத்துள்ள நான் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக் கொள்வதால் தங்களின் ஆயுள் பல காலம் நீடிக்கும் அல்லவா?' என்றார் அனுமன்.
இதை கேட்டு கண் கலங்கிய ஸ்ரீராமன் உன்னைப் போல ஒரு நண்பனை, பக்தனை அடைந்ததற்கு நான் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்!' என்றார்.
அன்று முதல் அனுமனுக்கு செந்தூரம் அணிவிப்பது தொடங்கியது. செந்தூரம் அணிந்து வழிபடுவதால் நம் ஆரோக்கியம் சிறக்கும். நம் அன்புக்குரியவர்களின் ஆயுள் அதிகரிக்கும். செந்தூரம் அணிவதால் ஸ்ரீராம பிரானின் நேரடியான அருளைப் பெறலாம்.
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயு புத்ராய தீமஹி தந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!!
______________________
அனுப்புதல்:
ப. கோபிபச்சமுத்து,
பாரதியார் நகர்,
கிருஷ்ணகிரி-1