வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற் கெண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில்
காணுதற் கண்ணிய ளல்லாத கன்னியைக் காணுமன்பு
பூணுதற் கெண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.
---------------------
வாணுதற் கண்ணியை = ஒளி பொருந்திய நெற்றியில் ஞானக்கண்ணை உடையவளே, விண்ணவர் யாவரும்=தேவர்கள் யாவரும், வந்திறைஞ்சிப்
பேணுதற் கெண்ணி= வந்து விருப்பத்துடன் பணிவதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் =எங்கள் தலைவியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு = அறியாமை உள்ள மனதில் காண்பதற்கு அண்ணிய ளல்லாத கன்னியைக் = நெருக்கமாக இல்லாத கன்னிகையாகிய அம்பிகையே காணுமன்பு = தரிசிக்கும் அன்பு,
பூணுதற் கெண்ணிய எண்ணமன்றோ =மனதில் ஆர்வம் வந்ததற்கு, முன்செய் புண்ணியமே= முன் பிறவியில் செய்த புண்ணியமே காரணமாகும்
--------------------
பரந்த நெற்றியில் ஞானக் கண்ணை உடைய அம்பிகையே, தேவர்களாலும் முனிவர்களாலும் வழிபட உகந்தவளும், உனது பெருமையை அறியாமல் இருப்பவர்களுக்கு எட்டி இருப்பவளும், என்றைக்கும் கன்னியாக இருக்கும் உன்னை, அகக்கண்ணால் தரிசிப்பதற்கு காரணம் முன் ஜென்மத்தில் யான் செய்த புண்ணியமே காரணம்
முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே அம்பிகையின் பரிபூரணமான திருவருளை பெற முடியும்.
*புண்ய லப்யா* - (லலிதா சகஸ்ரநாமம்) முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் இந்த பிறவியை அம்பிகையை பூஜிக்கும் பாக்கியம் கிடைக்கும்.
(தொடரும் /வளரும்) சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை