மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ,பவானி ஆற்றங்கரையினில்,காடுகள் நிறைந்த பகுதியில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை நொடிப் பொழுதில் தீர்க்கும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் எங்கள் குல தெய்வமாக இருந்து அருள் புரிகிறார்
காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது வன பத்ரகாளியம்மன் கோவில். பல வருடங்களுக்கு முன்பு சாகா வரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூசை செய்து சூரனை அழித்தாள். அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம்
செய்ததால், இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றது. இது தவிர ஆரவல்லி சூரவல்லி கதையோடும் இக்கோயில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
ஆண் வாடையே அறியாமல் மந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி, சூரவல்லி ஆகியோரை அடக்க பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்று சிறைப்பட்டு, பின்னர்
கிருஷ்ணன் அவனைக் காப்பாற்றினார். பின்பு, பாண்டவர்கள், அப்பெண்களை அடக்க, தங்களின் தங்கை மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர். அவன் இங்குள்ள அம்மனை வழிபட்டு ஆரவல்லியின் பெண்கள் சாம்ராஜ்ஜியத்தைத் தவிடுபொடியாக்க, அவர்கள் பயந்து போய் தங்கள் தங்கையை அல்லி முத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்து, அவள் மூலம் நஞ்சு கொடுத்துக் கொன்றனர். இதையறிந்த அபிமன்யு, வானுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டு வந்தான். நடந்த விசயங்களைக் கேள்விபட்ட அல்லிமுத்து, வெகுண்டெழுந்து ஆரவல்லியை அடக்கப் புறப்பட்டுச் சென்றான். வழியில் வனபத்ரகாளியம்மனை வழிபட்டு, அவள் அருள் பெற்று ஆரவல்லியின் சாம்ராஜ்ஜியத்தை அழித்தான். இவை வரலாறாகப் பேசப்படுகிறது.
அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறாள்.வண்டி வாகனங்கள் வாங்கும் இப்பகுதி மக்கள் இக்கோவிலில் பூஜை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இக்கோவிலின் தல மரமாக தொரத்தி மரம் உள்ளது. தொரத்தி மரத்தின் நுனியில் குழந்தை வரம் வேண்டுபவர்கள் கல்லை வைத்து தொட்டில் கட்டி விடுகின்றனர். குண்டம் இரங்கல் என்னும் தீ மிதிக்கும் திருவிழாவும் வனபத்ரகாளியம்மன் கோவிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
பகாசுரன், பீமன் ஆகியோர் இக்கோவிலின் காவல் தெய்வங்களாக உள்ளனர். இவர்களுக்கு இடையில் குந்தி தேவி ஒரு குழந்தையுடன் அமர்ந்திருக்கும் சிலை ஒன்றும் உள்ளது இக் கோவிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பவானி ஆற்றின் படித்துறையில் விநாயகர் கோவில் உள்ளது. பவானி ஆற்றில் வெற்றிலை மேல் கற்பூரத்தை ஏற்றி ஆற்றில் விடுவது இக்கோவிலின் மரபாக உள்ளது .சிறிது தூரம் நடந்து வந்தால் நாக தேவதை நமக்கு காட்சி தருகிறாள்.
புதிதாகத் தொழில் துவங்கும் நபர்கள், திருமணம் பற்றிக் கேட்கும் நபர்கள், சுவாமி முன்பு பூ போட்டு கேட்பது வழக்கம். சிவப்பு, வெள்ளைப் பூக்களை தனித்தனி பொட்டலங்களில் போட்டு, அவற்றை அம்பாளின் காலடியில் வைத்து, ஏதாவது ஒன்றை எடுத்துப் பார்க்கும்போது, மனதில் எந்த பூவை நினைக்கிறோமோ அந்தப் பூ வந்து விட்டால் அம்பாள் உத்தரவு தந்து விட்டதாக ஐதீகம். இது இக்கோயிலில் மிகவும் சிறப்பு.
வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நடக்கும். ஒரு வாரத்திற்கு சுமார் 300 லிருந்து 400 கிடாவரை வெட்டப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடா வெட்டுகின்றனர்.
ஆடிக்குண்டம் ஜூலை மாதம் 15 நாள் திருவிழா.அன்னையிடம் முறைப்படி அனுமதி பெற்று, ஆடி முதல் செவ்வாய் பூச்சாட்டி, 2 ஆம் செவ்வாய் திருபூக்குண்டம் அமைத்து, 3 ம் செவ்வாய் மறுபூஜை செய்து விழா கொண்டாடப் படுகிறது. 36அடி நீளமுள்ள திருக்குண்டம் அமைக்கப்படும். இதில் தீக்கங்குகள் உருவாக்கி பக்தர்கள் இறங்கி நடப்பார்கள். இத்திருவிழாவின் போது 2 லட்சம் பக்தர்கள் பங்குபெறுவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். இவை தவிர வாரத்தின் செவ்வாய் ,வெள்ளிக் கிழமைகளில் இக்கோயிலில் திருவிழா போலபக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் இக்கோயிலில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
பிரார்த்தனை
செய்வினை, பில்லிசூன்யம்ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக்கோயிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குகிறது என்பது இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் அனுபவத்தில் கண்ட உண்மை என்கிறார்கள். வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால், பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர். தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக இத்தலத்து பக்தர்கள் வழங்குவது வழக்கமாக உள்ளது.தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். பிரார்த்தனை நிறைவேறியவுடன் எலுமிச்சை கனி மாலை சாற்றுவது அம்மனுக்கு விசேஷம் .மேலும் இக்கோவிலில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 6 கிமீ தொலைவில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து பேருந்து வசதியும் ஆட்டோக்களும் அதிக அளவில் உள்ளன.
ம. வசந்தி... திண்டிவனம்.
முகவரி:
ம.வசந்தி,
பெலாக்குப்பம் ரோடு,
அவரப்பாக்கம்,
திண்டிவனம் - 604 001