எங்கள் குலதெய்வம் பொன்செய் செண்டாடும் ஐயனார் சிறப்பு:-
*மயிலாடுதுறை மாவட்டம் செம்பொன்னார்கோவிலில் இருந்து வடகிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் கிடாரங்கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட பழமையான சிற்றூர் புஞ்சை என்கிற பொன்செய் ஆகும்.இவ்வூரின் பழமையான பெயர் நனிப்பள்ளி என்றும் இவ்வூர் சிவன் கோவில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம் என்றும் கூறப்படுகிறது.
கண்ணகி கோவலனோடு மதுரைக்கு சென்றதாக கூறப்படும் பழமையான சாலைவழி(தற்போது பூம்புகார்-கல்லணை சாலை)காவிரிக்கரைக்கு தென்புறத்தில் அமைந்த இவ்வூரில் காவல் தெய்வமாக அமர்ந்து அருள்பாலித்து வருபவர் செண்டாடும் ஐயனார்.
பிரம்மாண்ட ஆலயத்தைக் கடந்து.. தெற்கு பார்த்த ஆலையத்தின் நுழைவு வாயில் இருபுறமும் இரண்டு பூதகணங்கள் கரங்களில் கதையோடும்..உருண்டு துருத்திபயமூட்டும் கண்களோடும் காவல்காக்க...உள்ளே பிரவேசித்தால்..நேர் எதிரே தெற்கு பார்த்தமுகமாக புவனம் காத்தருளும் புவனேஸ்வரி சந்நதி கொண்டு அருள்பாளிக்க..அதற்கு எதிரேமேற்குப்புறம் சந்நதிகொண்டு கிழக்கு பார்த்து அருள் புரிகிறார் விநாயகர்...கிழக்குப்புறம் தனது தேவியர் பூரணா..புஷ்கலை யுடன் மேற்குபார்த்த முகமாக அமர்ந்து அருள்பாளிக்கிறார் எங்கள் குலதெய்வமான செண்டாடும் ஐயனார்.
புவனேஸ்வரி அம்மன் சந்நதிக்கு மேல்புறம் ஏழறை அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக உருக்கொண்டு நின்றகோலத்தில் கோபவிழிகளும்..கொடுவாளுமாக காட்சியளிப்பவர் மேலவாசல் ஐயா வீரனார்.இவர் புவனேஸ்வரி அம்மனுக்கு காவல் தெய்வமாகவும் விளங்குகிறார்.
மேலவாசல் ஐயா சந்நதிக்கு பின்புறம் வடதிசையில் கிழக்குப் பார்த்து வரிசையாக அமர்ந்தநிலையில் அருள்பாளிக்கிறார்கள் சப்தகன்னியர்கள்.
இவர்களைத் தொடர்ந்து வீரனார்..ஆதியில் தோன்றிய பெத்த ஐயனார்..ஆகியோர் உற்பிரகார சுற்று மண்டபத்தில் தனித்தனி மாடங்களில் அருள் பாதிக்கின்றன.
தீயவர்களை அழித்து எதிரிகளை பந்தாடி வெற்றி கொள்வதில் தீரராக திகழ்கிறார் என்பதால் செண்டாடும் ஐயனார் பக்தர்களால் கொண்டாடப் படுகிறார்.
கோவிலை வலம்வந்து வெளி மண்டபத்துக்கு வந்தால்..வாசலில் கிழக்கே பார்த்து கனைத்தபடியே சுதை சிற்பவடிவில் ஐயனாரின் கம்பீரக்குதிரை...தன் சேவகர்களுக்கும் அடங்காமல் திமிரிக்கொண்டு நிற்க...அதன் காலடியில் தனது எஜமானை எதிர்பார்த்து காத்து நிற்கின்றன வைரவனும்..பூனையும்..
வெளிமண்டப மேற்புறத்தில் வேப்பமரத்தின் அடியில் தனித்தனி மண்டபங்களில் அருள்பாளிக்கிறார்கள்..மாணிக்கனார்..வன்னியநாதர் ஆகிய கிராமத்து தெய்வங்கள்.
இவர்கள் ஒருகாலத்தில் விவசாய குடிகளுக்கு பல்வேறு வகையில் உபகாரமாக வாழ்ந்தோ....அல்லது தியாகசுடராக உயிர்நீங்கியோ...உள்ளத்தில் இடம்பிடித்து..இக்குலதெய்வ வழிபாடு கொண்ட மக்களால் இங்கு தெய்வமாக நிலைபெற்று இருக்கலாம்..இச்சிலைகளின் தோற்றமும்..விவசாயகுடிகள் போன்று வேட்டி..மேல்துண்டு..முண்டாசு...கையில் தடி என்றநிலையிலேயே அமைந்துள்ளது.மற்றொரு சிறிய மாடத்தில் ஒரு தடிக்கோல் மட்டும் குறுக்காக சாற்றப்பட்ட நிலையிலும்..வேப்பமரத்துக்கு கீழே பல்வேறு முழுமையில்லாத சிறியச்சிறிய நடுகற்களும் அகல்களும் காணப்படுகின்றன.
இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி இரவும் அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைசிறப்பாக நடைபெறுகின்றது.அன்னதானமும் உபயதாரர்களால் வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் மற்றும் உடற்பிணிகள் விலகி நலமடைவர் ....திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்களின் ஜாதகத்தை அம்பாளின் பாதக்கமலத்தில் வைத்து பூசித்தால் தடைநீங்கி திருமணயோகம் கூடிவரும்.
இத்தகைய சிறப்புவாய்ந்த கோவிலுக்கு பல்வேறு காலங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்த போதிலும்..2012ல் நடைபெற்ற கும்பாபிஷேகமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
சிறிய அளவில் கற்கோவிலாகவும்..கருங்கல் பலகைகளால் ஆன கூரை..முக்கிய சந்நதிகள் விடுத்து ஏனைய உபதெய்வங்கள் வானமே கூரையாகவும்... புல்பூண்டுகள் புடைசூழவும் அருள்பாளித்து வந்தார்கள்..
அத்தகைய ஆலயம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு..நவீன முறையில் காற்றோட்டம்..சூரிய வெளிச்சம் கிடைக்கக்கூடிய முறையில்...பழைமையையும் பாதுகாத்து புதியக்கோவிலை கட்டி குடமுழுக்கும் செய்வ தந்துள்ளனர் பொன்செய் கிராம மக்களும்..அறங்காவலர் குழுவினரும்...அதற்கு தங்குதடையின்றி பொருளுதவி அளித்து உதவியவர்கள் இக்கடவுளரை குலதெய்வமாக கொண்ட வெளிநாடுவாழ் ...வெளிமாநில வாழ்..பல்வேறு இனத்தைச்சேர்ந்த பக்தர்கள் போற்றுதலுக்குறியவர்கள்.
பக்தர்கள் முடிக்காணிக்கை மண்டபம்..அன்னதான மண்டபம்...குளியல் அறைகள் ...உடைமாற்றும் அறை என சகலவசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
செண்டாடும் அய்யனாரை குலதெய்வமாக கொண்ட எங்களது இல்லங்களில்..அவருக்கு அபிஷேக ஆராதனையோ...அல்லது அர்ச்சனையோ...காலநேர..கடமை..பொருளுடைமையை உத்தேசித்து செய்தபின்பே..சுபகாரியங்களை செய்துவருகிறோம்.செண்டாடும் ஐயனாரின் அருட்பார்வையில் எங்கள் பாட்டன்..முப்பாட்டன் கருணையும் கலந்திருப்பதாக நம்புகிறோம்.சந்நதியிலிருந்து வெளிவந்து சாலையில் நின்று கரம்தூக்கி கும்பிடும்போது..பிரம்மாண்ட ஆலமரவிழுதுகளின் ஊடே சிலுசிலுத்து தலை கோதும் காற்று...தன்திருக்கரத்தால் ஐயனே ஆசி வழங்குவதாய் சிலிர்த்து நிற்போம்..சகல செயல்களிலும் உற்ற தோழனாய்..உடன் பங்காளியாய்...நின்று காப்பார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு..நிம்மதியாக இல்லம் திரும்புவோம்.எங்கள் குலச்சாமி செண்டாடும் ஐயனாரின் அருள் பார்வைக்கு முடிவேது ..அது தொடந்துகொண்டே இருக்கும்.*
*அரும்பூர்.க.குமாரகுரு,மயிலாடுதுறை*
-------------
க.குமாரகுரு;1/240,அரும்பூர்;வடகரை-அஞ்சல்;மயிலாடுதுறை-வட்டம்&மாவட்டம்-609314*