ஏழுலோக நாயகி அம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர்
தாலுகாவில் உள்ளது. கல்லணை பூம்புகார் சாலையில் சூரியனார் கோயிலை
அடுத்து வரும் திருமாந்துறை என்ற ஊருக்குள் இருந்து சுமார் ஒரு கி. மீ.
தொலைவில் உள்ளது இந்த கோயில். திருமாந்துறைக்கு காவல் தெய்வமாக
இருப்பவர் இந்த அன்னை தான்.
சப்த கன்னியர்கள் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வராஹி, வைஷ்ணவி, சாமுண்டி,
இந்திராணி ஆகிய ஏழு தேவியர்கள் சேர்ந்த உருவமாக இருக்கிறார் இந்த அம்மன்.
தனது பக்தர்களை காக்க ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வடிவத்தில் அன்னை பராசக்தி
அவதரிப்பார். அந்த ஊரில் இருக்கும் தனக்கு பிரியமான பக்தர் ஒருவரின் கனவில்
தோன்றி தான் இருக்கும் இடத்தை தெரிவித்து அங்கே ஒரு கோயில் எழுப்பும்படி
சொல்வாள். புற்று வடிவில் தோன்றுவாள். சிலை உருவில் பூமியை தற்செயலாக
தோண்டும் போது வெளிப்படுவாள்.அப்படித்தான் இந்த மணலூரிலும் அன்னை
பராசக்தி தோன்றினாள். அந்த அன்னையை தான் ஏழுலோக நாயகி என்று அழைத்தார்கள்.
மணலூர் கிராமத்தில் குளம் ஒன்று இருந்தது. அதிலிருந்து தான் அன்னை தனது லீலையை
தொடங்கினாள். கவலையோடு இருப்பவர்கள் அந்த குளக்கரை அருகில் வந்து அமர்ந்தால்
அவர்கள் மனம் அமைதி அடைந்தது. தீராத பிரச்சனைகளை கொண்டவர்களுக்கு அங்கு
வந்தால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தது. சந்நியாசிகள் அந்த குளக்கரையிலே
கிடந்தார்கள்.
இரவு நேரங்களில் மனித நடமாட்டம் இல்லாத காலங்களில் சிறிய பெண் ஒருத்தி காலில் கொலுசு கட்டி
கொண்டு ஓடுவது போன்ற ஒரு ஓசை அந்த குளத்து நீரில் கேட்டபடி இருந்தது. அது பிரமை
என்று நினைத்து ஆரம்பத்தில் கிராம மக்கள் விட்டுவிட்டனர். ஆனால் அந்த ஓசையை
அனைவரும் கேட்ட பிறகு குளத்திற்குள் அன்னை பராசக்தி இருப்பதை உணர்ந்தார்கள்.
ஓசை வரும் திசையை நோக்கி குளத்தில் இறங்கி தேடிப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
இந்த இடத்தில் அபிராமி பட்டருக்கு காட்சி கொடுத்த ஆதி பராசக்தி கதை நினைவுக்கு வருகிறது.
அந்த திரைப்படத்தில் ' சொல்லடி அபிராமி' பாடலில் 'செங்கையில் வண்டு கலின்கலி னென்று
செயஞ்செயம் என்றாட' என்று தொடங்கும் வரிகள் 'குற்றால குறவஞ்சி'யில் இருந்து எடுத்து
கண்ணதாசன் கையாண்டு இருப்பார். முடிக்கும் போது 'மலர் பங்கயமே உனைப் பாடிய
பிள்ளை முன் நிலவு எழுந்தாட...விரைந்து வாராயோ, எழுந்து வாராயோ, கனிந்து வாராயோ...'
என்று பாடியிருப்பார். அங்கே நிலவை எதிர்பார்த்து அபிராமி பட்டர் பாட...இங்கு அன்னையையே
நீருக்குள் ஒரு கிராமே திரண்டு தேட...அந்த மக்களின் மனநிலையும் அப்போது அதே நிலையில்
இருந்திருக்கும். குளத்தில் மெல்லிய வெளிச்சமான இடத்தில் அம்பிகை சிலையாய் கிடைத்தாள், காட்சி தந்தாள்.
சிலையை எடுத்துக்கொண்டு கரைக்கு வந்தார்கள். "என்னை ஊரின் வடக்கு திசை நோக்கி எடுத்துச்
செல்லுங்கள். உரல், உலக்கை சத்தம் இல்லாத இடத்தில் என்னை அமர்த்துங்கள்.
என்றும் நான் உங்களுக்கு நான் காவலாக இருப்பேன் என்று அசரீரியாக அன்னை வாக்கு சொல்ல
அதன்படி கிராம எல்லையை தாண்டி வனம் போல இருந்த இடத்தில் சிலையை இறக்கி
அங்கேயே கோயில் கட்டினார்கள். ஏழு சப்த மாந்தர்களின் ஒன்றிணைந்த உருவமாக அன்னையின்
சிலை இருந்ததால் 'ஏழுலோக நாயகி என்ற பெயர் அன்னைக்கு வந்தது.
இந்த கோயில் பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால் அருளும் கீர்த்தியும் மிகப் பெரியது.
ஆரம்ப காலங்களில் மக்கள் இந்த கோயிலுக்கு சென்று வர சற்று பயந்து உள்ளார்கள்.
அன்னையின் அருள்பார்வை அனைவரையும் ஈர்த்தது. ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு
இந்த அன்னை குல தெய்வமாக இருக்கிறாள். இந்த அன்னையை பார்க்கும் போது அவள்
நமது கோரிக்கைகள் அனைத்தையும் தெரிந்து கொண்டு நம்மை நோக்கி புன்னகை
செய்தவாறு 'கவலை வேண்டாம் நிறைவேற்றித் தருகிறேன் என்று சொல்வது போல
இருக்கும். நமக்கு அது போதுமே. சட்டென்று நம் மனதுக்குள் பதிந்து விடும் அன்னையின் உருவம்.
'அயிகிரி நந்தினி நந்தித மேதினி' ஸ்லோகம் நம் காதில் ஒலிக்க ஆரம்பித்து மனதில்
இருக்கும் அச்சம் நீங்கி புது தெம்பும், தைரியமும் வந்து சேரும்.
ஆடி வெள்ளி இங்கு சிறப்பாக கொண்டாடப்படும். ஒரே ஒரு குருக்கள் மூன்று நான்கு
கோயில்கள் பூஜை முடித்துவிட்டு இங்கு வருகிறார். செவ்வாய், வெள்ளி ஆகிய
கிழமைகளில் மாலை ஆறு மணிக்குள் கோயிலுக்கு சென்று வருவது நல்லது.
அதன் பிறகு குருக்கள் இருக்க மாட்டார். ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணி முதல்
2.00 மணி வரையில் குருக்கள் இருப்பார். தற்சயம் கோயில் அருகே தமிழ்நாடு அரசின்
நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. ஆதலால் சாதாரண நாட்களில் மாலை ஆறு
மணிக்கு மேல் சென்றால் கோயிலை பார்க்கலாம், திறந்திருக்கும். நடை சாத்தி
இருக்கும். இடுக்கு வழியாக அம்மனை பார்க்கலாம். அம்மனை தரிசிக்க நினைப்பவர்கள்
வெள்ளிக்கிழமை செல்வது நல்லது. நானும் செவ்வாய்க்கிழமை அன்று சென்று
தரிசனம் கிடைக்காமல் கடந்த வெள்ளி அன்று மீண்டும் சென்று தரிசனம் செய்தேன்.
ஒரு முறை ஏழு லோக நாயகியை தரிசிக்க மணலூர் வாருங்கள். ரயிலில் வந்தால்
ஆடுதுறையில் வந்து இறங்கி அங்கிருந்து இந்த கோயிலுக்கு வரலாம். அங்கிருந்து
சுமார் நாலு கி மீ தூரம் தான் இருக்கும்.
திருமாளம் எஸ். பழனிவேல்