மாமரங்கள் நிறைந்து விளங்கியமையால் இத்தலம் ‘மாங்காடு’ என்னும் காரணப் பெயர் பெற்றது.
அன்னை பார்வதி, சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக தவமிருந்த புண்ணியத் தலம் இந்த மாங்காடு திருத்தலம்.
கயிலை மலையில் இருந்த போது, பார்வதி சிவபெருமானின் கண்ணை விளையாட்டாக மூடினாள். அதனால் உலகமே இருண்டது. கோபமடைந்த சிவன், பார்வதியை சபித்து, தவம் செய்து மீண்டு வருமாறு கூறினார். அன்னை பார்வதி மாங்காடு வந்து நெருப்பில் தவமிருந்தாள்.
மாங்காட்டிலே காமாட்சியாய் அவதரித்த அன்னை, ஈஸ்வரனை வேண்டி பல காலம் காத்திருந்தாள், பலன் ஏதும் இல்லாத காரணத்தாலும், ஐயனைக் காண வேண்டும் என்ற தாபத்தாலும் ஐந்து குண்டங்களில் அக்னி வளர்த்து நடு குண்டத்தில் ஊசி முனையில் ஒற்றைக் காலில் சிவனைக் காண கடுந்தவம் புரிந்தாள். இதனால் அம்மை இத்தலத்திலே ‘தபசு காமாட்சி’ என்று அழைக்கப்படுகின்றாள்.
மாங்காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்த மகேஸ்வரியும், மலையரசன் மகளுமான தன் தேவியின் மேல் கருணை கொண்ட சிவபெருமான், அம்மைக்கு அருள் செய்ய வந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அதே தலத்தில் தன்னை பூஜித்து வந்த சுக்ராச்சாரியாருக்கு முதலில் ஈசன் காட்சி தந்தார். அதோடு, அன்னையிடம் அசரீரியாக, காஞ்சிக்கு செல்லும்படியும், அங்கு வந்து மணம் புரிந்து கொள்வதாகவும் கூறினார்.
தவத்தில் ஆழ்ந்திருந்த அன்னை, தன் நாயகன் சொல் கேட்டு அவரை அடைய காஞ்சி மாநகருக்கு சென்றாள். அங்கு மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வந்தாள். அப்போது கம்பா நதியை பெருகிவரச் செய்து, பங்குனி உத்திர நன்னாளில் அம்மையை மணம் செய்தருளினார் சிவபெருமான்.
ஈசனை மணந்து கொள்ளும் ஆர்வத்தில் ஏற்பட்ட அவசரத்தால், தான் தவத்திற்காக வளர்த்த குண்டங்களை அணைக்காமல் மாங்காட்டில் இருந்து காஞ்சி சென்று விட்டாள் அன்னை. அதனால் அந்தத் தீயின் வெப்பம் தாங்காமல் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த மக்கள் தவித்தனர். உயிரினங்கள் துன்பத்தில் இருந்தன.
பார்வதி தேவியார் இந்த இடத்தை விட்டு சென்றாலும், நெருப்பு மட்டும் அணையவில்லை. ஆதிசங்கரர் இங்கு வந்து 'அர்த்த மேரு மகா சக்கரத்தை' நிறுவினார். இதன் மூலமே மாங்காடு குளிர்ந்தது.
கோவில், சோழர் காலக் கட்டிடக்கலையை காட்டுகிறது. தற்போதே ராஜகோபுரம் கட்டப்பட்டது. நுழைவு வாசலுக்கு அருகே விநாயகர் சிலை உள்ளது.
கோவிலின் நடுவில் அர்த்த மேரு மகா சக்கரம் உள்ளது. இங்கு மாங்காடு அன்னை காமாட்சி வீற்றிருக்கிறாள்.
ஆடிப் பூரத்தன்று, அம்மனுக்கு வளையல் சாத்தி, வழிபாடுகள் செய்வது இங்கு மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதி மாதம் பவுர்ணமி நாளில் அம்மனுக்கு 'ஊஞ்சல் உற்சவம்' நடைபெறுகிறது.
மாங்காடு காமாட்சி அம்மனுக்கு ஆறு வாரங்கள் தொடர்ந்து இரண்டு எலுமிச்சைப் பழங்கள் வாங்கி வந்து அர்ச்சனை செய்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும். நேர்த்திக்கடனாக பக்தர்கள் அம்பாளுக்கு புடவை சாத்தி வழிபடுகிறார்கள்.
இத்திருக் கோவிலில் ஸ்ரீசக்கரத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதற்கு செய்யப்படும் குங்கும அர்ச்சனை மிகவும் விசேஷமானது.
பஞ்சலோகத்தினால் ஆன ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றன.
மூலஸ்தானத்தில் இருந்த தவக்கோலத்திற்கு பதிலாக, ஒரு கையில் கிளியோடும் மறு கையில் கரும்போடும் கூடிய சாந்தமான அம்மனை காஞ்சிப் பெரியவர்கள் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம்.
மாவடியில் அம்மன் தவம் செய்ததால் 'தல விருட்சமாக மாமரம்' உள்ளது.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் இந்தக் கோவிலில் விசேஷ நாட்கள் ஆகும்.
சுக்ரன் வழிபட்ட தலம் என்பதால், திருமணத்தடை, குழந்தைப் பேறு ஆகியவற்றுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் அதிகம்.
அதி அற்புதமான திருத்தலம் மாங்காடு காமாட்சியம்மன் கோவில். வேண்டும் வரங்களை தரும் தாயாகவும், திருமண வரம் அருளும் தெய்வமாகவும் அன்னை காமாட்சி அருள்பாலித்து வருகிறாள். நாமும் அருள் பெறுவோம்!
-வி.சி. கிருஷ்ணரத்னம்,
F1, மங்கள் ஃபிளாட்ஸ்,
(எஸ்.எஸ்.வி. ஹாஸ்டல் அருகில்)
ஆர்.எம்.ஆர். அவென்யூ,
28, ஞானாம்பிகை தெரு,
காட்டாங்குளத்தூர் & போஸ்
ட்
செங்கல்பட்டு மாவட்டம்,
பின் - 603 203.