திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ளது முடிகொண்டான்
கிராமம். இந்த கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளது புகழ்பெற்ற
வட பத்ரகாளியம்மன் மடம். இங்கு எழுந்தருளி இருக்கிறார் வட பத்ரகாளியம்மன்.
ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே இக்காளியை வழிபாடு
செய்து கொண்டு இருக்கிறார்கள்.
சுமார் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு தொன்மையான அரச குடும்பங்கள்
மலையாள பகவதி அம்மனாக இந்த அம்மனை வழிபட்டு வந்து இருக்கிறார்கள்.
முகம்மதியர்கள் படையெடுப்புக்கு பிறகு எல்லாமே சிதலமாகிக்கொண்டு இருந்த
போது ஒரு பெரிய பேழையில் அம்மனை வைத்து அம்மனைப் பற்றிய ஓலைச்
சுவடிகளையும் வைத்து ஆற்றிலே விட்டுவிட்டார்கள். இந்த ஊருக்கு அருகில்
இருக்கும் திருமலைராஜன் ஆற்றில் பேழை ஒன்று மிதந்து வருவதைக் கண்ட
கிராம மக்கள் ஆற்றின் கரையில் திரண்டு நின்றனர். சிலர் அந்த பேழையை
எடுக்க முற்பட்டனர். ஆனால் அது யாருடைய கைக்கும் சிக்காமல் விலகிக் கொண்டே
சென்றது. அந்த ஊரில் சக்தி பூஜை செய்து வரும் செங்குந்த மரபினர் சார்ந்த குடும்பத்தினர்
அன்னை பராசக்தியை வேண்டி 'அம்மா இது இங்கு நன்மை செய்ய வந்ததா இல்லை
தீமை செய்ய வந்ததா என்று உணர்த்து என்ற வேண்டுகோளை வைக்க அந்த பேழை அவர்கள் கைகளுக்கு
வந்தது. எல்லோருடைய முன்னிலையிலும் அந்த பேழை திறக்கப்பட, உள்ளே
அம்மன் சிரசுடன், அஷ்ட புஜங்களுடனும் சூலம் கபாலங்களுடன், ஓலை சுவடுகள் உடன்
காட்சியளித்தாள். ஓலைச்சுவடியில் அன்னை அனைவருக்கும் நல்லது செய்ய வந்திருக்கிறாள்.
பக்தர்களை பாரபட்சம் பார்க்காமல் காக்கும் காளியம்மன் அவள் என்று இருந்தது. எப்படி பூஜிக்க
வேண்டும் என்று மக்கள் குழம்பி நிற்க 'தலை பிள்ளையின் ஒரு துளி ரத்தத்துடன்
அன்னதானங்களோடு பூஜிக்க வேண்டும் என்று அசரீரியாய் அம்மன் குரல் ஒலித்தது.
மக்கள் மகிழ்வோடு மேள தாளங்கள் முழங்க அன்னையை கிராமத்துக்குள்
எடுத்துச் சென்றனர்.
செங்குந்த மரபினர் அந்த காளியை தங்கள் இல்லத்தில் வைத்து பூஜிக்க ஆரம்பித்தனர்.
அவர்களின் சந்ததி வளர்ந்த பிறகு அவர்கள் காளியை ஒரு மடத்தில் வடக்கு பக்கம் பார்க்கும்படி
பிரதிஷ்டை செய்தார்கள். அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கனவில் காளி தோன்றி
தான் தனியாக இருப்பதாகவும் தன்னுடன் வந்த தனது சகோதரி இன்னொரு பேழையில் வந்தவள்
நீண்ட தொலைவு சென்றுவிட்டதாகவும், தனக்கு துணை வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அவர்
தங்கள் குடும்பத்தினர், மற்றும் கிராம மக்களுடன் கலந்து பேசி பேழையில் இருந்த அம்மன்
போலவே ஆகம விதிகள் படி இன்னொரு அம்மனை செய்து இரண்டு அம்மன்களையும் வழிபட
ஆரம்பித்தார்கள். காலப்போக்கில் தொடர்ந்து பூஜை செய்ய முடியாத சூழ்நிலை உருவாக
அன்னை இருவரிடமும் 'அம்மா தினசரி எங்களால் பூஜை செய்ய முடியாத நிலை உள்ளது.
ஒரு வருடத்திற்கு தேவையான பழங்கள், அன்னங்களை பேழையில் வைத்து விடுகிறோம்.
சூலம், கபாலத்திற்கு தினசரி பூஜை செய்கிறோம். ஆண்டுக்கு ஒரு முறை பேழையில்
இருந்து எங்கள் அனைவரின் இல்லந்தோறும் நீ எழுந்தருள வேண்டும் என்று வேண்டுகோள்
வைத்தனர். அம்பாள் ஏற்றுக்கொண்டாள். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அம்பாள் வீதி
உலா வந்து அனைவருக்கும் அருள் பாலிக்கிறாள். 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு
ஐம்பொன்னால் ஆன இரண்டு அம்பாள்களின் சிலையை குழந்தை வடிவில்
செய்து கோயில் கட்டி அதில் வைத்து வழிபட ஆரம்பித்தார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் இந்த காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று
வருகிறது. செங்குந்த மரபினர் ஆண்டுதோறும் ஒரு மாதம் விரதமிருந்து அம்மனை
சுமந்து கொண்டு 'காளியாட்டம்' நிகழ்ச்சியை பக்தி பரவசத்தோடு நடத்துகிறார்கள்.
திருமணத் தடை விலக குழந்தை பாக்கியம் கிடைக்க பிரார்த்தனை செய்தவர்கள்
வேண்டுதல் நிறைவேறியதும் பல்லய வழிபாடு செய்வார்கள். பேழைக்குள் இருக்கும்
அம்மனை சீர்வரிசையோடு மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வருவார்கள்.
பழவகைகளோடு அன்னதானமிட்டு பல்லய ஆராதனை செய்து வழிபடுவார்கள்.
ஆடி, தை மாதங்களில் என்று இடைப்பட்ட காலங்களில் இந்த பல்லய வழிபாடு நடக்கும்.
இந்த கோயிலில் பூஜகராக இருப்பவர் திரு.பஞ்சநதம் அவர்கள். பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளுக்கு இறை வழிபாடு முறைகளை சிறு வயதில் இருந்தே கற்றுக்கொடுத்தால்
நல்லது என்று சொன்னார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு
தீர்வு காண செய்ய வேண்டிய விஷயங்களை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
"யாதுமாகி நின்றாய் - காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீதும் நன்மையெல்லாம் - காளி
தெய்வ லீலை யன்றோ..? -பாரதி சொன்னபடி யாதுமாகி
நிற்கும் காளியை தரிசனம் செய்து வாழ்வில் பல நன்மைகளை பெறுவோம்.
திருவாரூர் மயிலாடுதுறை சாலையில்
முடிகொண்டான் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிழக்கே சுமார் 1 கி.மீ. தொலைவில்
உள்ளது இந்த கோயில்.
===திருமாளம் எஸ்.பழனிவேல்