tamilnadu epaper

எங்கள் குலதெய்வம்: வடக்கன்தரை பகவதி அம்மன் சிறப்பு*

எங்கள் குலதெய்வம்: வடக்கன்தரை பகவதி அம்மன்   சிறப்பு*

"அருள்மிகு வடக்கன்தரை பகவதி அம்மன் திருக்கோவில்" கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்கன்தரை எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான அம்மன் கோவில்களில் ஒன்றாகும். அதன் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து சற்று விரிவாக காண்போம்.

 

*### 1. மூலவர் மற்றும் அமைவிடம்:*

 

மூலவர்: பகவதி அம்மன் 

ஊர்: வடக்கன்தரை 

மாவட்டம்: பாலக்காடு 

மாநிலம்: கேரளம் 

 

*### 2. திருவிழா:*

 

இங்கு சித்திரையில் பிரதிஷ்டா தினம், மாசி கடைசி வெள்ளியில் வேலைத் திருவிழா துவக்கம் (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை), நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய விழாக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

 

*### 3. தல சிறப்பு:*

 

இக்கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வேலைத் திருவிழா எனும் வித்தியாசமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பர். மேலும், சமூக நல்லிணக்கம் மற்றும் இறையாண்மையை ஊக்கவிப்பதாக இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அத்துடன், இது அம்மன் கோவிலாக இருந்தாலும், குங்குமம் பயன்படுத்தப்படுவதில்லை.

 

*### 4. கோவில் நேரம்:*

 

காலை 5 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்.

 

*### 5. பிரார்த்தனை:*

 

இங்கே பாடப்படும் தோற்றப்பாடலைக் கேட்டால் நமது பாவங்களும், பீடைகளும் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பெண் குழந்தைகளுக்கு வியாதி அல்லது பிற காரணங்களால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டாலோ, அவர்களின் கல்வி, எதிர்காலத்தில் நல்ல கணவன் அமைவது போன்றவற்றிற்காக 'தெத்திப்பூவை' சந்தனத்தில் நனைத்து 'இரத்த புஷ்பாஞ்சலி' எனும் அலங்கார பூஜை செய்யப்படுகிறது.

 

*### 6. நேர்த்திக்கடன்:*

 

இரட்டி மதுரம், காட்டு பாயாசம், பால் பாயாசம், பகவதி சேவை பாயாசம் ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

 

*### 7. தல வரலாறு:*

 

கற்புக்கரசி மதுரையை எரித்தபின் மலையாள தேசத்திற்குச் சென்றாள். அவளுடன்; கன்னடத்து பகவதி, கண்ணு கொட்டும் பகவதி மற்றும் புல்லுக்கோட்டை ஐயன் ஆகியோர் சென்றனர். இவர்கள் தெய்வ அனுகூலம் பெற்றவர்கள் என்பதை அறிந்த மலையான மக்கள் 'நடப்பதிமன்னம்' என்ற இடத்தில் கண்ணகிக்கும், 'பிராயரி' என்ற இடத்தில் கன்னடத்து பகவதி, கண்ணு கொட்டும் பகவதிக்கும் கோயில் கட்டினர். அந்நியர் படையெடுப்பின் போது கோயில் சேதமடைந்தது. பகவதி சிலையும் நொறுக்கப்பட்டது. பக்தர்கள் பகவதி சிலை இருந்த பீடத்தை எடுத்து, 'திருபுராய்க்கல் வடக்கன் தரை' என்ற இடத்திலுள்ள விஷ்ணுகோயில் அருகில் வைத்து வழிபட்டு வந்தனர். நாளடைவில் பீடத்திற்கும், அத்திமரத்திற்கும் பகவதியின் அருள் கிடைத்ததால் பகவதி அங்கு வாசம் செய்ய வந்தாள். தன்னை தேடிவரும் பக்தர்களுக்கு வேண்டிய பயனையும் அளித்தாள். இதையடுத்து பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டு, பீடத்தில் பகவதியின் ரூபமாக சிறிய கல்தூண் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவ்வாறாக, 'வடக்கன்தரை பகவதி அம்மன் திருக்கோவில்' தலவரலாறு உள்ளது.

 

*### 8. தல பெருமை:*

 

~~~ கிருஷ்ணர் கிழக்கு முகமாகவும், அம்மன் மேற்கு முகமாகவும் அருள்பாளிக்கின்றனர். கண்ணகி கணவனை இழந்த கோலத்தில் பகவதியாக அருள்பாலிப்பதால் முல்லைப்பூ, பத்தி, குங்குமம் ஆகியவை சன்னதியில் பயன்படுத்துவதில்லை. கோயிலுக்குள் அழகான தீர்த்தக்குளம் ஒன்றும் உள்ளது.

 

*~~~ தோற்றப் பாடல்:* 

 

கண்ணகி வரலாற்றை அடிப்படையாக கொண்ட தோற்றப்பாட்டு மாசி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையிலும், சித்திரை மாதம் புனர்பூசம் நடாத்திரத்தன்று நடக்கும் திருவிழாவிலும் பாடப்படுகிறது. விழா துவக்க நாளில், குரல் வளமுள்ள பக்தர்கள் இதைப் பாடுவர். பகவதியின் கதை இந்த பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பாடலைக் கேட்டால், நமது பாவங்களும், பீடைகளும் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பாடல் கோஷ்டியினர் 41 நாட்கள் விரதமிருந்து வருகின்றனர்.

 

*~~~ இரத்த புஷ்பாஞ்சலி:*

 

பகவதி சன்னதிக்கு குழந்தைகளை அழைத்து வந்தால் 'பால பீடைகள்' எனப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் விலகுகிறது. தன் கணவனை இழந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்று இத்தலத்து பகவதி (கண்ணகி) உறுதி எடுத்துள்ளதால், பெண்கள் இவளிடம் சுமங்கலியாக இருக்க வரம் கேடகின்றனர். பெண் குழந்தைகளுக்கு வியாதி அல்லது பிற காரணங்களால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டாலோ, அவர்களின் கல்வி, எதிர்காலத்தில் நல்ல கணவன் அமைவது போன்றவற்றிற்காக 'தெத்திப்பூவை' சந்தனத்தில் நனைத்து 'இரத்த புஷ்பாஞ்சலி' என்னும் அலங்கார பூஜை செய்யப்படுகிறது.

 

*~~~ இரட்டி மதுரம்:*

 

பாயாசத்தில் வழக்கத்தை விட அதில் இனிப்பு சேர்த்து செய்யப்படும் 'இரட்டி மதுரம்' என்ற நைவேத்யம் பகவதிக்கு பிரியமானது. அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று இந்த நைவேத்யம் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் நாம் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டத்தை பகவதி அளிப்பதாக நம்பிக்கையுள்ளது. இதுதளிர காட்டுப் பாயாசம் பால் பாயாசம் பகவதி சேவை பாயாசம் ஆகியவை இரவு நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

 

*~~~ வேலை திருவிழா:*

 

திருச்சூரில் பூரம் திருவிழா போன்று வடக்கன்தரை பகவதி கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரம்மாண்டமான 'வேலை திருவிழா' நடக்கிறது. சுவாமி யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டு ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் நடத்தும் திருவிழா இது. விழாவின் பத்து நாட்களும் வடக்கன்தரா மக்கள் விரதம் கடைப்பிடிக்கின்றனர். இந்நாட்களில் 'கும்மாட்டி வழிபாடு' விசேஷம். கும்மாட்டி என்றால் அம்மன், பூதகணம் உள்ளிட்ட வேடமிட்டு வருவதாகும். தமிழகத்தில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பக்தர்கள் வேடமிட்டு நேர்ச்சை செலுத்துவது போல இங்கும் செய்கின்றனர். மரத்தடியில் 35 கிண்ணம் கொண்டு விளக்கேற்றும் 'பாலமரம் முறிப்பு' என்ற நிகழ்ச்சி வித்தியாசமானது.

 

இவ்வாறாக இக்கோவில் பல சிறப்புகளை பெற்று, தனித்து விளங்குகிறது.

 

*### 9. கோவில் முகவரி:*

 

அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில்,

வடக்கன்தரை,

பாலக்காடு,

கேரளம்.

 

ஃபோன்: +91 491 250 0229 ; +91 491 250 4851

 

*### 10. செல்லும் வழி:*

 

இருப்பிடம் - பாலக்காடு இரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. ஆட்டோ மற்றும் பேருந்து மூலம் பக்தர்கள் இக்கோவிலை சென்றடையலாம்.

 

*முடிவாக*

 

'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்ற வாக்கிற்கிணங்க.. அருள்மிகு வடக்கன்தரை பகவதி அம்மனை வழிபட்டு.. வாழ்வில் வளத்துடனும், நலத்துடனும் நீங்கள் சிறக்க வேண்டி இத்துடன் நிறுத்திக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி!

 

*தொகுப்பு மற்றும் ஆக்கம்/-*

 

_பாவலன் பாரத்_

_அரியலூர்._