நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
அணிந்துரை
முனைவர் அ.கோவிந்தராஜூ
பேராசிரியர் இரா.மோகன் அவர்களின் தலை மாணாக்கர்
காலத்தை வெல்லும் கவிதைகள்
ஹைக்கூ கவிதை உலகில் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் மதுரக் கவிஞர், மதுரைக் கவிஞர் இரா.இரவி அவர்கள். இப்போது குறள் வெண் செந்துறை யாப்பில் ஒரு கவிதை நூலைப் படைத்துள்ளார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
மரபுக் கவிதைகளில் மிகவும் எளிமையான யாப்பு அமைப்பைக் கொண்டது குறள் வெண்செந்துறை பா. மிகுந்த நெகிழ்வுத் தன்மை உடையது. கவிதை எழுதும் ஆர்வம் உடைய எவரும் எளிதாக இந்த யாப்பில் மரபுக் கவிதையை எழுத முடியும்.
இரண்டிரண்டு அடிகளாக அமையும். முதலடியில் ஈரசை அல்லது மூவசை கொண்ட இரண்டு, மூன்று, நான்கு சீர்கள் அமையலாம். அதே எண்ணிக்கையில் இரண்டாம் அடியிலும் அமைய வேண்டும். முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவதும், இரு அடிகளின் முதல் சீர்களிலும் எதுகை அமைவதும் சிறப்பு. கவிஞர் இரவி அவர்கள் அடி மோனையை அதாவது ஈரடிகளின் முதல் சீர்களில் மோனையை அமைத்து யாப்பை மேலும் எளிமைப் படுத்தியுள்ளார். எதுகை மோனைகளுக்குத் தவம் இருக்காமல் தான் சொல்ல வந்த கருத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.
நூல் முழுவதையும் பொறுமையாய்ப் படித்து முடித்தவுடன் நூலாசிரியர் இரவி அவர்கள் சமூகப் பொறுப்புடன் எழுதும் படைப்பாளர் என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன்.
காந்தியத்தை நாட்டு மக்கள் மறந்து விட்டார்கள் என்பதை,
“பணத்தாளில் மட்டும் உன் படத்தை அச்சடித்துவிட்டு
பாரதத்தின் தந்தை உன்னை மறந்து விட்டோம்”
என வருந்துகிறார்..
அனைவரும் ஆகலாம் கலாம் என்னும் கவிதையில்,
“வாய்மை நேர்மை எளிமை மூன்றும் இருந்தால்
வையகத்தில் நீங்களும் ஆகலாம் கலாம்’
என்று இளைஞர்களை ஆற்றுப்படுத்துகின்றார்.
மாமனிதர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்குப் பாமாலை சூட்டும் பகுதி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அவர்களது ஆளுமைப் பண்புகளைப் படம்பிடித்துக் காட்டும் பாடல் வரிகள் பலவாக உள்ளன. எடுத்துக்காட்டாக தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களைப்பற்றி எழுதும்போது,
“திரைப்படத்தில் மிகமிக நன்றாக நடித்தவர்
தமிழக மக்களிடம் என்றும் நடிக்காதவர்”
என்று குறிப்பிடுவதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மதுரைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களைத்
“தூங்கிய தமிழைத் தட்டி எழுப்பியவர்
தூங்கும் போதும் தமிழை நினைத்தவர்”
என்று அறிமுகப்படுத்துவது சாலப்பொருத்தமே.
தமிழ் வளர்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் நன்னன் அவர்களின் மறைவு குறித்து இயற்றிய இரங்கற்பாவில், அது ஈடு செய்ய முடியாத இழப்பு என்கிறார். தொடர்ந்து அதை ஈடு செய்வதற்குரிய ஆலோசனையை வழங்குகிறார். “ஈடு செய்வோம் நல்ல தமிழில் நாளும் பேசி” என்னும் முத்திரை வரியைப் பதிவு செய்கின்றார். காலமெல்லாம் நல்லதமிழில் பேச நல்ல வழிகளைச் சொன்ன நாவலர் நன்னன் அவர்களுக்கு இதுதான் பொருத்தமான அஞ்சலியாகும்.
அண்மையில் மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் புறத்தோற்றம் அழகாக இல்லை என்றாலும் அவரது அகத்தோற்றத்தைக் கண்டு உலகம் பாராட்டியது என்பதை,