எங்கள் குலதெய்வமான சிங்கிகுளம் நெல்லை மாவட்டம், களக்காடு அருகே பஞ்சலிங்க ஸ்தலங்களில் ஒன்றாக, தசவீரட்டான ஸ்தலங்களிலே மேற்கே பார்த்த சிவாலயங்களில் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் பச்சையாறு என்றழைக்கப்படும் ஆருத்ரா நதிக் கரையில் அமைந்திருக்கின்றது. ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதும், ஆன்மிகம் மற்றும் சிற்பக்கலைகள் திறனின் பெட்டகமாகவும் திகழ்கின்ற இக்கோயிலில் ஆடல் வல்லான் எம்பெருமான் ஈசன் கைலாசநாதராகவும், பக்தர்களின் பக்திக்கு மனமிறங்கி கேட்ட தெல்லாம் தருகின்ற அன்னை பார்வதி தேவி ஆவுடையம்பாளாகவும் அருள் பாலிக்கின்றார்கள்.
இந்திர லோகத்தில் வசிக்கும் தெய்வீகப் பசுவான காமதேனு கேட்பதை உடனடியாகத் தரக்கூடிய அபூர்வ சக்தி படைத்தது. அதனாலேயே சிவபெருமானைப் பசுபதி நாயகனாகப் போற்றி வழிபாடு செய்கின்றோம். ஈசனார் சிவனை பசுக்கள் பூஜித்து வழிபட்ட பஞ்சலிங்க ஸ்தலங்களான களக்காடு, பத்தை, பத்மநேரி, சிங்கிகுளம், தேவநல்லூர் ஆகியவை திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப் பெற்றவையாகும்.
இத்தலங்களில் காமதேனு, ஸ்ரீராமபிரான்,அகஸ்தியர்,லோபமுத்திரை, மகோதரர், ஹயக்ரீவர் வழிபட்ட வரலாறும்,மூவேந்தர்களான சேர,சோழ,பாண்டிய மன்னர்களால் சிறப்புற ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றதையும் பல்வேறு கல்வெட்டுகள் எடுத்து இயம்புகின்றன.
அர்த்தக பஞ்சக ஸ்தலங்களான இவை தோன்றிய விதம் பற்றி வரலாறு கூறுவதை சற்றே பின்னோக்கி சென்று பார்ப்போம். துவாபர யுகத் துவக்கத்தில் ஸ்ரீ ராமபிரான் தீர்த்தயாத்திரை நிமித்தம் இத்தலங்களுக்கு வந்து வழிபட்டமையால் சத்திய விரத ஷேத்திரங்களெனப் பெயருடன் அர்த்த பஞ்சக ஸ்தலங்களாக அழைக்கப்பட்டன. ஸ்ரீ ராம பிரானால் கொல்லப்பட்ட அரக்கனின் தலை மகோதர முனிவரின் கால்களைப் பற்றியதாகவும், ஆருத்ரா நதியான பச்சையாற்றில் நீராடி பஞ்ச லிங்கங்களை வழிபட்ட பின்பு அவனது தலைபாதாளத்தில் அமிழ்ந்து அழிந்ததாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
முன்பொரு காலத்தில் சிவபெருமானிடம் காமதேனு தான் பிரத்யோகமாக வழிபட திருத்தலம் ஒன்றினை கேட்க உடனே மேரு மலையினை சிறிதே கிள்ளி காமதேனுவிடம் கொடுத்து தென்னகத்தில் சென்று வழிபட இசைந்தார். அம்மலையினைக் கொண்டு வருகையில் அவை ஐந்து இடங்களில் சிறு பகுதிகளாக விழுந்தமையால் அங்கெல்லாம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து, கோயில்களை எழுப்பி பஞ்ச ஸ்தலங்கள் என்றும் சிகரக் கோயில்கள் என்றும் பூஜித்து வந்தனர்.
புன்னைவனமாகிய சிங்கிகுளத்தை அடைந்த காமதேனு தான் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்திற்கு தன் பங்காக பாலைப் பொழிந்திட அதுவே திருமஞ்சனபாலாக ஆருத்ரா நதியில் சங்கமித்த இடம் சிங்கிகுளத்தில் கைலாசநாதர் கோயிலின் முன் உள்ள தேனும் தீர்த்தம் ஆகும். காமதேனு வழிபட்டமையால் இத்தலம் இறைவனின் நாமம் பசுபதிநாதர் என்றும் தேனுபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றது.
ஒரு சமயத்தில் அகத்திய குறுமுனி சிங்கிகுளம் வந்திருந்தபோது மஹா யக்ஞங்களில் ஒன்றான மனுஷ யக்ஞமான அன்னதானம் என்கின்ற வன போஜன உற்சவத்தை நிகழ்த்தி இங்குள்ள சிவனை வழிபட்டதாகவும் வரலாறு கூறுகின்றது.
சிங்கன் என்ற மலைக்குறவத்தலைவன் விளாங்கனியை தவம் செய்து கொண்டிருந்த முனிவரொருவர் மீது விளையாட்டாக வீசி எறிந்தமையால் குரங்காக மாறும்படி சபிக்கப்பட்டான். தன் பிழையினை உணர்ந்து வருந்திய சிங்கனுக்கு சாப விமோசனமாக கந்தர்ப்பவனம் என்கின்ற தேனு தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபட்டு அந்த வழியே வருவோர் போவோர்க்கு நாவற்பழங்களை உதிர்த்து தந்தமையால் புண்ணியம் சேர பெற்று சாபம் நீங்கி தன் பூர்வீக வடிவை அடைந்தான். அந்த வேடனின் பெயரில் இத்தலம் விளங்கி வருவதாகவும் தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
தேவலோகத்தில் பஞ்ச தருக்களின் மலர்களுடன் பொதிகையினை வழிபட கிளம்பிய. தேவேந்திரனின் மந்திரியான விசுமுகனைக் கண்ட இந்திரன் அதனை தனது மனைவிக்கு தருமாறு வற்புறுத்தினான். இதனால் மனமுடைந்த விசுமுகன் அகத்தியரிடம் தனது மனக்குறையினை முறையிட்டபோது, அவரும் ஆசீர்வதித்து பொதிகை சிறப்பினையும் கந்தற்பகிரி அடிவாரத்தில் காமதேனு பிரதிஷ்டை செய்த வழிபட்ட சிவலிங்க திருமேனியின் பெருமையையும் எடுத்துரைத்து அவனுக்கு வரம் ஒன்றினையும் வழங்கினார். இந்திரனை மன்னித்தருளி, இந்திரேஸ்வரமென்று இத்தலத்தினை என்று அழைத்திட விசுமுகன் கேட்டபடியே அழைக்கப்பட்டும் வருகின்றது.
ஸ்ரீ சிருங்கேரி மகா பீட சாரதா பீட முப்பத்தைந்தாவது அதிபதியான ஸ்ரீ அபிநவ வித்யார்த்த மஹா சுவாமிகள் 1962ல் இங்கே வந்து தங்கி ஆராதனைகள் செய்து வழிபட்ட பிறகு இத்தலத்தின் சிறப்பு மேன்மேலும் உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு சென்றடைந்தது.
கோயிலின் உள்பகுதியில் சுவாமி, அம்பாள் சன்னதிகள் அழகு பெற அமைந்துள்ளன. சுவாமி சன்னதி முன்பு கைலாசநாதரை நோக்கியவாறு நந்தியம்பெருமான் காட்சி தருகிறார். கோயிலை சுற்றி வலம் வரும் போது பிரகாரங்களில் முழுமுதற் கடவுளான விநாயகரும், முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் தனித்தனி சன்னதி கொண்டுள்ளனர். அத்துடன் தெட்சிணாமுர்த்தி, மகாலிங்கம், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், சனீஸ்வரர், பைரவர், தர்மசாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகளும் சன்னதி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இத்திருத்தலத்தில் பஞ்சலிங்கமும் உள்ளது. இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லாமலிருப்பினும், சுவாமி, அம்பாள் மற்றும் தர்மசாஸ்தா சன்னதிகளில் கோபுரங்கள் உள்ளன. ஒவ்வொரு மாத பிரதோஷ பூஜையின் போதும், மாலையில் மறையும் சூரியனின் ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது படர்வது எம்பெருமானை சூரியன் தரிசித்து செல்வது போல் உணரப்படுகின்றது.
நான்குநேரி வட்டம், சிங்கிகுளம் கிராமம் ஆவுடையம்பாள் சமேத கைலாச நாதர் திருக்கோயில், ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில், அருள்தரும் ஸ்ரீ ராஜவடிவு அம்மன், ஸ்ரீ முத்தாரம்மன் மற்றும் வாகைகுளம் ஸ்ரீ சாஸ்தா கோயில் திருக்கோயில்களில் கும்பாபிஷேகம்,வருஷாபிஷேகம்
விநாயகர்,கும்பபூஜையுடன், 1008 சங்குபூஜை,ஹோமம்,பூர்ணாகுதி, சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் அன்னதானத்துடன் அந்தந்த காலக்கட்டங்களில் குறையேதுமின்றி அறங்காவலர் S.V.S.மணி அய்யர் அவர்களின் இறைபணி கைங்கரியத்தில் சீரும் சிறப்புடன் வெகு சிறப்பாக நடைபெற்று வருவதை அவசியம் குறிப்பிட்டேயாகவேண்டும்.
சிங்கிகுளத்திற்கு வந்து கைலாசநாதர், ஆவுடையம்பாளை வழிபட்டால் தீராத நோய்கள் தீர்ந்து நம்மை தொடரும் பிணிகள் அகலும் என்பது கண்கூடாகும். அத்துடன் திருமண தடை அகன்று சகல வளங்களும் கிடைக்கும் என்பது பக்தகோடிகளின் நம்பிக்கையாகும்.
*****
அனுப்புநர்:
R.Sankaran,
"ஜானகி நிவாஸ்,"
Old 30-A,New no.31
முனிசிபல் காலனி முதல் தெரு,
மகராஜநகர் அஞ்சல்,
திருநெல்வேலி -627011.