செவ்வாய்க்கிழமை வழிபாடு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த நாளில் குறிப்பாக முருகப்பெருமானையும், துர்க்கை அம்மனையும் வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருப்பவர் முருகப்பெருமான். இந்த நாளில் அவரை வழிபடுவது தைரியம், வீரம், மனோபலம், வெற்றி மற்றும் செல்வத்தை அருளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
செவ்வாய்க்கிழமை வழிபாட்டின் முக்கியத்துவம்:
செவ்வாய்கிழமையில் முருகப்பெருமானை வேண்டி எந்த வழிபாடு, விரதம் ஆகியவற்றை மேற்கொண்டாலும் அது பல மடங்கு நற்பலன்களை தரும்.
செவ்வாய் பகவானுக்கு உரிமையான நாள் என்பதாலேயே செவ்வாய்க்கிழமை என குறிப்பிடுகிறோம். செவ்வாய் பகவானுக்குரிய அதிதேவதை முருகப்பெருமான் என்பதால் செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றதாக சொல்லப்படுகிறது. முருகப்பெருமானுக்கு திதி, நட்சத்திரம், கிழமை என மூன்று விதமான விரதங்கள் கடைபிடிக்கப்படுக்கின்றன.
திதி அடிப்படையில் விரதம் இருந்தால் 15 நாட்களும், நட்சத்திர அடிப்படையில் விரதம் இருந்தால் மீண்டும் அந்த நட்சத்திரம் வருவதற்கு ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் கிழமை அடிப்படையில் விரதம் இருப்பது குறுகிய கால விரதம் என்றாலும், மிக விரைவாக பலன் தரக் கூடியதாகும்.
செவ்வாய் பகவான், வீடு, நிலம், சொத்து ஆகியவற்றிற்கு காரணமான கிரகம். செவ்வாய் பகவானை வழிபட்டால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். அதை விட முக்கியமானது செவ்வாய் பகவான் தான் ரத்தம் தொடர்பான நோய்களுக்கும் காரணமானவர். இவரே உடல் வலிமை, தைரியம் ஆகியவற்றிற்கும் காரணமான கிரகமாக கருதப்படுகிறார்.
அங்காரகன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவானை, முருகப்பெருமானின் திருநாமங்களில் ஒன்றான குமாரன் என்ற திருநாமத்தாலும் குறிப்பிடுவதுண்டு. எனவே, செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானையும் செவ்வாய் பகவானையும் ஒருசேர மனதில் நினைத்து, மனதார வேண்டிக்கொண்டால் விரைவில் திருமண யோகத்தைத் தந்தருள்வான். தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்.
செவ்வாய் ஓரை வழிபாடு:
செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து, முருகப்பெருமானை வழிபடுவதால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் அனைத்தும் குறையும். அதோடு சில குறிப்பிட்ட வழிபாடுகளை செவ்வாய் கிழமையில் வரும் செவ்வாய் ஓரை நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான காலத்தில் செய்யும் போது அதற்கு விரைவான பலன் கிடைக்கும்.
என்ன நினைத்து இந்த வழிபாட்டினை செய்கிறோமோ அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். அதோடு வாழ்க்கையில் ஏற்றம் என்பது இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையை மாற்றும் சிறப்பான வழிபாடு என்றே இதை கூறலாம்.
வெற்றிலை தீப வழிபாடு:
செவ்வாய்க்கிழமையில் காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பிறகு ஒரு தட்டினை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மத்தியில் மஞ்சள், குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். 6 வெற்றிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றிலை மகாலட்சுமியின் அம்சம் என்றாலும், அதன் காம்பு பகுதியில் மூதேவி வசிப்பதாக ஐதீகம். அதனால் அவற்றின் காம்பு பகுதியை கிள்ளி எடுத்து விடுங்கள். பின்னர் ஆறு வெற்றிலைகளின் மேல், நடு, நுனி பகுதியில் மஞ்சள், குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது இந்த வெற்றிலைகளை விசிறி போல் தட்டில் பரப்பி வைக்கவும். ஆறு வெற்றிலைகளின் நுனி பகுதியும் வெளிபுறமாக இருப்பது போலவும், அடிப்பகுதி உட்புறமாக இருப்பது போலவும், அந்த வெற்றிலைகள் ஒன்றின் மீது ஒன்று படும் வகையிலும் வைக்க வேண்டும்.
அந்த ஆறு வெற்றிலைகளிலும் பூ வைத்து, மத்தியில் ஒரு அகல் விளக்கினை ஏற்றி வையுங்கள். நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி, அந்த விளக்கில் கிள்ளி வைத்த வெற்றிலை காம்புகளை போட்டு, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கானது ஆறு வெற்றிலைகளிலும் இருக்கும் வகையில் விளக்கை வைத்து ஏற்ற வேண்டும். பிறகு முருகப்பெருமானை மனதார நினைத்து, உங்களின் வேண்டுதலை சொல்லி வழிபடுங்கள். இந்த விளக்கு அரை மணி நேரமாவது பூஜை அறையில் எரிய வேண்டும்.
வெற்றிலை தீபம் மட்டுமின்றி செவ்வாய்கிழமையில் வீட்டின் பூஜை அறையில் சட்கோண கோலமிட்டு, அதன் மீது ஆறு நெய் விளக்குகள் ஏற்றியும் வழிபடலாம். இப்படி விளக்கேற்றுவதால் அந்த ஆறு விளக்குகளிலும் முருகப்பெருமானின் ஆறுமுகங்களும் எழுந்தருளி, நமக்கு அருள் புரிவார் என்பது நம்பிக்கை.
முருகப்பெருமானுக்கு நைவேத்தியமாக இரண்டு வாழைப்பழங்கள் அல்லது சர்க்கரை கலந்த பால் என எது வேண்டுமானாலும் வைக்கலாம். இந்த வழிபாட்டினை செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் தொடர்ந்து 6 வாரங்கள் செய்து வர வேண்டும். ஆறு வாரங்களில் இந்த வழிபாடு நிறைவு செய்வதற்குள், உங்களின் வேண்டுதல் நிறைவேற தொடங்கி விடும்.
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:
தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும்.
சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் அமையும்.
ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும்.
பொருளாதாரத்தில் உள்ள கஷ்டநிலை நீங்கும்.
தீராத கடன் பிரச்சனைகள் நீங்கி நல்லதொரு வழிபிறக்கும்.
செல்வச்செழிப்பு பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
Thanks and regards
A s Govinda rajan
17)5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai