திருவரங்கநாதனுக்கு தினப்படி 3 வேளை திருவாராதனம் & 6 வேளை அமுது படிகளும் சமர்ப்பிக்கப்படுகின்றன.
காலை முதல் பிரசாதம்:
கோதுமை ரொட்டி(பெருமாளுக்கு 11, தாயாருக்கு 6), வெண்ணை, கும்மாயம் (குழைந்த பாசிப்பருப்பு),
பச்சைப் பால் (2 லிட்டர்).
ரொட்டியும் & பருப்பும் வடநாட்டு உணவு. துலுக்க நாச்சியாருக்காக முதல் அமுதாக நடைபெறுகிறது.
ரொட்டி செய்யப்படும் முறை:
வெல்லத்தை நைசாகத் தேய்த்து இழைக்கணும். அந்த ஈரப்பதத்தோட கோதுமை மாவு போட்டு பிசையணும்.
வெல்லமும் மாவும் இரண்டறக் கலந்ததும் உருண்டைகளாகப் பிடிச்சு கையில தட்டணும். அதனை நெய்யில் போட்டு எடுக்கணும்.
இந்த அமுது படிகள் முடிந்த பின்னர் காலை திருவாராதனம் நடைபெறும்.
காலை இரண்டாவது பிரசாதம்:
பொங்கல், வடிசல் (சாதம்), தோசை, புத்துருக்கு நெய் (தினமும் புதிதாக மண் பானையில் காய்ச்சப் பட்டது)
கூட்டு, கறியமுது, ஊறுகாய் & ஜீரண மருந்து – சுக்கு, வெல்லம், சீரகம் & ஏலக்காய். இதுதவிர சில அதிகப்படி தளிகைகள்.
வெண் பொங்கல் – பாசிப்பருப்பு, பச்சரிசி & நெய் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படும்.
பச்சரிசி உளுந்து தோசை – பெருமான் அமுது செய்யும் தோசை சற்று தடிமனாக இருக்கும்.
காலை தணிக்கைகள் அமுது செய்யப் படும் நேரம்: 7.45 – 9.15
மதியம் பெரிய அவசரம் அதனுடன் திருவாராதனம்:
வடிசல் (சாதம் – 18 படி ) கூட்டு, கறியமுது, சாத்தமுது (தக்காளி சேர்க்காமல் புளி, மிளகு, சீரகம்),
திருக்கண்ணமுது (அரிசி, பாசிப்பருப்பு, பால் & வெல்லம்) மற்றும் அதிரசம்-11
கோயிலோ பெரிய கோயில்!
பெருமாளோ பெரிய பெருமாள்!
தளிகையோ பெரிய அவசரம்!!
பெரிய அவசரத்தில் 50 ஆண்டுகள் முன்னர் வரை கூட்டு, கரியமுது என்பது
செடி 5 & கொடி 5 என்ற வகையில் 10 காய்கறிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
தற்போதைய காலங்களில் ஒரு கறியமுது மற்றும் ஒரு கூட்டு என்று குறைந்திருப்பதை நாம் அறிகிறோம்.
கொடியில் காய்க்கும் காய் கறிகள் – அவரை, புடலை, பூசணி, பாகற்காய், வெள்ளரிக்காய்.
செடியில் காய்க்கும் காய்கறிகள் – கொத்தவரை, வாழைக்காய் & கிழங்கு வகைகள்
ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்துக்கு அருகே, அமைந்துள்ள,”மதுரகவி திருநந்தவனத்தில்” இருந்து
மதுரகவி சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊறுகாய் சேவை நடந்து வருகிறது.
பெருமாளுக்குத் தினமும் 10 எலுமிச்சம்பழங்களும் தாயாருக்கு 5 எலுமிச்சம் பழங்களும்
நந்தவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன.
மாலை ஷீராண்ணம் தளிகை:
ஷீராண்ணம் (அரை தித்திப்பாக இருக்கும் பொங்கல்), கறியமுது, திருமால் வடை, அப்பம்,
தேன்குழல், தோசை மற்றும் அதிகப்படி தளிகைகள்
பெருமாளுக்கு அமுது செய்யப்படும் பணியாரங்கள் –
பெரிய அப்பம் (6), பெரிய வடை (11) & பெரிய தேன்குழல் (6) ஆகியவை எண்ணிக்கை குறைவு தான்.
தாயாருக்கு மட்டும் ஷீராண்ணத்துடன், பச்சரிசிப் புட்டு தினமும் மாலையில் அமுது செய்யப்படும்.
இரவு செலவு சம்பா திருவாராதனம்: வடிசல் (சாதம்) மற்றும் பாசிப்பருப்பு.
இந்த திருவாராதனத்தில் செல்வர் எழுந்தருளி பலி சாதித்து வருவதால் இதற்கு செல்வர் சம்பா என்ற பெயர் ஏற்பட்டது.
காலப்போக்கில் இதுவே செலவு சம்பா என்று மருவியது.
இரவு கடைசி தளிகை – அரவணை & சுண்டக் காய்ச்சிய பசும்பால்
அரவணை (ஒருவிதமான சக்கரை பொங்கல்), கறியமுது மற்றும் காய்ச்சிய பால்.
இரவு 10 முதல் 11 மணி ஆகும். (ஜீயபுரம் செல்லும் நாளில் மட்டும் மாலை 6 மணிக்கு அமுது செய்வார்).
தாயார் சன்னதியில் அரவணையுடன் கீரை சேர்த்து செய்யப்படும்
இந்தப் பால் காய்ச்சப்படும் முறை ஒரு சிறப்பான முறை. அதாவது மண்பானையில் முதலில் தண்ணீரை ஊற்றி காய்ச்சி
அதன் மூலம் பானை சற்று இறுகிவிடும். அதன் பின்னர் பச்சை பாலை சுண்டக் காய்ச்சி அதனை சூடு போக ஆறவைத்து
அதற்குப் பின்னர் குங்குமப்பூ, ஏலக்காய் & வெல்லம் சேர்த்து அமுது செய்யப்படும்.
உடையவரும் கஷாயமும்:
ஸ்வாமி ராமானுஜர் ஒருமுறை பெருமாளின் முகம் வாடி இருப்பது கண்டு,
முதலியாண்டானை பார்த்து பெருமானுக்கு என்ன அமுது செய்யப் பட்டது என்று கேட்டார்.
அதற்கு தயிர்சாதமும் & நாவல் பழமும் என்று முதலியாண்டான் சொன்னாராம்.
உடையவர் உடனே அரங்கன் ஒரு குழந்தை போல! அவருக்கு ஜலதோஷம் வந்து விடும் என்று சொல்லி
அதற்காக கஷாயம் தன்வந்திரி சன்னதியிலிருந்து தயார் செய்து பெருமாளுக்கு அமுது படைக்க சொன்னாராம்.
இதுவே உடையவருக்கு இருந்த பரிவை நமக்குக் காட்டுகின்றது.
முன்னர் அரவணையுடன் கஷாயம் அமுது நடந்ததாகவும் அது தன்வந்திரி சந்நிதியில் இருந்து வந்ததாகவும் செய்தி உண்டு.
திருவரங்கநாதனுக்கு தளிகை செய்வது தினமும் புது மண்பானையில் தான்.
மற்ற கோவில்களை போல் இங்கு பாத்திரங்களைக் கொண்டு தயார் செய்யப் படுவதில்லை.
வெள்ளிக்கிழமை புனுகாப்பு புளியோதரை:
பெரிய பெருமாளுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் திருமார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு புனுகு தைலம் சாத்தப்படும்.
இந்த தைலம் சாற்றிய பின் விசேஷத் தளிகையாக புளியோதரை அமுது செய்வார்.
உத்ஸவங்கள் இருப்பின் இந்த வைபவம் நடைபெறாது.
பூச்சாற்று உற்சவத்தில் பானகம்
பூச்சாற்று உற்சவத்தில் தினமும், பூச்சூடிய பின் 5 பானைகளில் சிறப்பு பிரசாதமாக பானகம் மற்றும்
வடை பருப்பு (பயத்தம் பருப்பு) அமுது செய்யப்படும்.
அதன் பின்னர் இந்த பானகம் கோஷ்டி பிரசாதமாக விநியோகம் செய்யப்படும்.
வசந்த உற்சவ சாற்றுமுறை பால் மாங்காய்
வசந்த உற்சவ சாற்றுமுறை நாளன்று பாலில் மாங்காய் மற்றும் சில பழங்கள், சேர்த்து தயார் செய்யப்படும் ஒரு வகையான பிரசாதம்.
இதை ராக்ஷச கறியமுது என்று சொல்லும் வழக்கமும் உண்டு. பொதுவாக இது வைகாசி விசாகத்தன்று வரும்.
ஆனி ஜேஷ்டாபிஷேக பெரிய திருப்பாவாடை
ஆனி மாதம் கேட்டை நட்சத்திரம் (ஜேஷ்டா) தினத்தன்று ஆண்டுதோறும் பெரிய திருமஞ்சனம் நடைபெறும்.
உற்சவர் நம்பெருமாளுக்கு கவசங்கள் கழற்றி திருமஞ்சனமும் பெரிய பெருமாளுக்கு திருமேனி முழுவதும் தைலம் சாத்தும் வைபவம் நடைபெறும்.
இதற்கு அடுத்த நாள் அன்னகூட உற்சவம் என்று அழைக்கப்படும் பெரிய திருப்பாவாடை அமுது செய்யப்படும்.
108 படி அன்னம் தயார் செய்யப்பட்டு, பெருமானுக்கு முன்னே சேர்க்கப்பட்டு அமுது செய்யப்படும்.
ஆகமங்களின் படி தினசரி நித்தியப்படி அமுதுபடிகளில் ஏதேனும் குறை இருந்தால்,
அதனை நிறைவு செய்வதற்காக நடத்தப்படும் திருப்பாவாடை உற்சவம் என்ற குறிப்பும் உண்டு.
மார்கழி பெரிய திருநாள் சிறப்பு அமுது படிகள் –
சம்பார தோசை, செல்வரப்பம் மற்றும் உருப்படி
சம்பார தோசை – பெரிய திருநாளில் தினம் பெருமாளுக்கு சம்பார தோசை எனும் தடிமனான பெரிய தோசை அமுது செய்யப்படும்.
அரைக்கால் தோசையை சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்!
செல்வரப்பம் – மார்கழி பெரிய திருநாளில் தினமும் இந்த செல்வரப்பம் அமுது செய்வார்.
தட்டை போல் சிறிய வட்டமாக இருக்கும்.
உருப்படி – மார்கழி பெரிய திருநாளின் கடைசி நாள் சாற்றுமுறை அன்று உருப்படி என்னும் சிறப்பு பணியாரம் அமுது செய்வார்.
இது தட்டையை விட தடிமனாகவும், சிறிய அளவில் இருக்கும்.
சாற்றுமறை அன்று இந்த பணியாரங்கள் நூற்றுக்கணக்கில் அமுது செய்வார்.
தை, பங்குனி & சித்திரை உற்சவம் கொடியேற்ற தின அப்பம்
தை பங்குனி மற்றும் சித்திரை கொடியேற்றம் நடைபெறும் அன்று காலை சிறப்பு அமுதாக பெருமாள் அப்பம் அமுது செய்வார்.
இந்த கொடியேற்றப்பம் பெருமாள் ஏளப்பண்ணும் வேற்று ஆட்களுக்கு கிடைக்கும் பிரசாதம்.
வாகன வடை
உற்சவ காலங்களில் வாகனத்தில் புறப்பாடு கண்டருளும் போது அரிசி மாவு வடை சிறிதாக இருக்கும்.
இந்த வடை வாகனத்தில் எழுந்தருளிய உடன் அமுது செய்வார்.
மாசி வெள்ளி கருடன் – கொழுக்கட்டை பிரசாதம்
மாசி மாதம் தெப்ப உற்சவம் நாலாம் திருநாளன்று வெள்ளி கருட வாகனம் நடைபெறும்.
அன்று பெருமாள் வீதி எழுந்தருளி வாகன மண்டபம் அடைந்த பின்னர் சிறப்பு பிரசாதமாக பெரிய கொழுக்கட்டை அமுது செய்வார்.
மாசி தெப்பம் சிறப்பு பிரசாதம்
தெப்பத்தன்று பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து கிளம்பும் முன்னர் சர்க்கரைப் பொங்கல், சீயம் போன்ற அமுது படிகளை அமைத்து செய்வார்.
இவை முன் காலங்களில் தெப்பத்தில் எழுந்தருளிய பின்னர் நடுவே இருக்கும் மைய மண்டபத்தில் அமுது செய்யப்பட்டதாக செவிவழிச் செய்தி.
பங்குனி மாத சேர்த்தி உற்சவம் அக்காரவடிசல்
உறையூர் நாச்சியார் சேர்த்தி மற்றும் பெரிய பிராட்டியார் பங்குனி உத்திர சேர்த்தி நடைபெறும் இரண்டு நாட்களிலும்,
பெருமாள- தாயார் ஏகாந்தம் முடிந்து அமுது செய்யப்படும். பலரும் அதிகப்படி தளிகையாக அக்கார அடிசல் சமர்பிப்பார்கள்.
வாகனங்களுக்கு அமுது
பெருமாள் வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா முடிந்து நான்முகன் கோட்டைவாசல் நுழைந்த பின்னர்
கூரத்தாழ்வான் சன்னதி முன்னர் இரண்டு நிமிடங்கள் நிற்பார்.
அப்போது வாகனங்களுக்கு ஏற்றார்போல் அமுது படிகள் சமர்ப்பிக்கப்படும்.
உதாரணமாக சேஷ வாகனம், அம்ச வாகனம் & கற்பக விருட்சம் போன்றவற்றுக்கு
பால், குதிரை வாகனத்திற்கு கொள்ளு, கருடனுக்கு கொழுக்கட்டை போன்ற பிரசாதங்கள் வாகனங்களுக்கு அமுது செய்யப்படும்.
வழிநடை உபயங்கள்
வழிநடை உபயங்கள் இரண்டு வகை உண்டு. ஒன்று பானகம் & வடை பருப்பு (பயத்தம் பருப்பு).
பெருமாள் எழுந்தருளி பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் , புளியோதரை போன்ற விதவிதமான பிரசாதங்கள் அமுது செய்வார்.
கோவிலுக்கு உள்ளே நடைபெறும் வசந்த உற்சவம், பவித்திர உற்சவம், ஊஞ்சல் உற்சவம் மற்றும் பூச்சாற்று உற்சவம்
ஆகிய உற்சவங்களில், பெருமாள் மண்டபத்திற்கு எழுந்தருளியபின் சிறப்பு தளிகை அமுது செய்வார்.
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
-ஜெயந்தி சுந்தரம்