tamilnadu epaper

தேங்காய்க்கு புகழ்பெற்ற பேராவூரணி

தேங்காய்க்கு புகழ்பெற்ற பேராவூரணி

தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்கோடி பகுதியில், கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 52 அடி உயரத்தில் அமையப்பெற்ற ஒரு பேரூராட்சி பேராவூரணி ஆகும். பேராவூரணி நகரம், 18 பேரூராட்சி உறுப்பினர்கள் கொண்ட பேரூராட்சி ஆகவும், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் அடங்கிய ஒரு நிர்வாக பகுதி ஆகவும் இருந்து வருகிறது. பேராவூரணி ஒரு சட்டமன்ற தொகுதிஆகவும் இருந்துவருகிறது. சுமார் 5853 குடும்பங்களை கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 22 ஆயிரத்து 84 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84 சதவீதம் ஆகும். இயற்கை வளம் மிகுந்த இந்த பேராவூரணி பகுதியில், விவசாயம் செழித்து காணப்படும். இந்த பகுதியில் நெல், வாழை, பலா, தென்னை முதலிய பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. அடிப்படையிலேயே விவசாயப் பின்புலம் கொண்ட இந்த பேராவூரணி பகுதியில், பக்தி நிறைந்த மக்களும் அதன் சாட்சியாக பல்வேறு சிறப்புமிக்க திருத்தலங்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன. அதற்கு முத்தாய்ப்பாக பேராவூரணி நகரின் நடுநாயகமாக வீற்றிருக்கும் ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் சாட்சியாகும். பேராவூரணி பகுதிவாழ் மக்களுக்கு காவல் தெய்வமாக இருந்து, மிகப்பெரிய அளவில் அற்புதங்களை செய்து வருகிற ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் திருவிழா அதற்கு சாட்சி. சித்திரை மாதம் நடைபெறும் இக்கோவில் திருவிழாவிற்கு கடல் கடந்து வாழும் பேராவூரணி பகுதி மக்களும் இங்கு வந்து ஸ்ரீ நீலகண்ட பிள்ளையாருக்கு நன்றி செலுத்தி வணங்கி மகிழ்வதை தங்கள் கடமையாக கொண்டிருக்கின்றனர். சித்திரை பெருந்திருவிழா பேராவூரணியில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழா ஆகும். பேராவூரணி பகுதி அடிப்படையிலேயே தென்னை மரங்கள் சூழ்ந்த பகுதியாகும். பேராவூரணியில் 75% அதிகமாக தென்னை விளைவிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் தென்னை, பொள்ளாச்சி மற்றும் இதர இடங்களில் விளையும் தென்னையை விட, தரத்திலும் அதன் பருமனிலும் அதிகம் இருப்பதால் இங்கு விளைவிக்கப்படும் தேங்காய்க்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உண்டு. பேராவூரணி, மொய் விருந்திற்கு பெயர் பெற்ற பகுதியாக விளங்குகிறது. அதாவது உறவினர்களின் சிறப்பு விழாக்களுக்கு சென்று, தங்களால் இயன்ற பணத்தை அந்த விழாக்களில் செலுத்தி அதை தம் வீட்டில் கணக்காக வைத்துக் கொள்வர். பிரிதொரு நாளில் நம் வீட்டில் விழா நடக்கிற பொழுது, நாம் பிறருக்கு செய்த பணத்தினை நமக்கு செய்து விட்டு அவர்கள் புதிதாக நமக்கு பணம் செய்வார். அவர்கள் புதிதாக செய்த பணத்தை கணக்கிட்டுக்கொண்டு, அதை அவர்கள் என்றாவது ஒருநாள் நடத்தும் விழாவில் நாம் புதிதாக செய்து விட வேண்டும். இந்த முறையை பேராவூரணி பகுதியில் மொய் விருந்தாக கொண்டாடுகின்றனர். குறிப்பாக ஆடி மாதம் துவங்கி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக மொய் விருந்து விழாக்கள் நடைபெறும். அந்த மொய் விருந்து விழாக்களில் கிடாய் வெட்டி மிகப்பெரிய அளவில் விருந்து பரிமாறப்படும். இந்த முறை பேராவூரணி பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் இலட்சக்கணக்கில் பணம் இந்த விழாக்களின் போது புழங்கும். இந்த முறை பல ஏழைகள் வாழ்வில் பொருளாதார உயர்வு பெறவும், பொருளாதார சிக்கலில் உள்ளவருக்கு கை தூக்கி விடவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. மேலும், பேராவூரணி அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மனோரா கடற்கரை மிகப்பெரிய சுற்றுலா தளமாக உள்ளது. பேராவூரணி அருகில் உள்ள சேதுவாசத்திரம் பகுதியில் சிறிய மீன் பிடித்து துறைமுகமும் அங்கு நடக்கும் மீன் ஏலமும் பிரசித்தி பெற்றது. பேராவூரணி அருகில் உள்ள ஆத்தாளூர் வீரமாகாளி அம்மன் கோவில், கழனிவாசல் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பழைய பேராவூரணி ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில், மருந்த பள்ளம் சிவன் கோயில் ஆகியவை பேராவூரணி பகுதி மக்களின் பக்திக்கு உதாரணமாக திகழ்கின்றன. மேலும் பேராவூரணி அருகில் உள்ள ஆதனூரில் நூற்றாண்டு பழமையான புனித அன்னாள் தேவாலயம் கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையாக திகழ்கிறது. பேராவூரணி நகரின் மத்தியில் அமைந்திருக்கிற பள்ளிவாசல் இஸ்லாமிய மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குகிறது. இங்கு நடக்கும் பல்வேறு திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பதும், அம்மதத்தினருக்கு பிற மதத்தினர் உதவியாக இருந்து, உறவை பேணி பாதுகாப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. பேராவூரணியில் செயல்பட்டு வருகிற லயன்ஸ், ரோட்டரி சங்கங்கள் பல ஆண்டு பழமையான சங்கங்களாகவும், மக்களின் சமூகம் மேம்பாட்டுக்கு பல்வேறு வகையிலும் உதவுவணவாகவும் இருந்து வருகின்றன. பேராவூரணியில் செயல்பட்டு வருகிற நகர வர்த்தக கழக பொறுப்பாளர்கள், வணிகர்களின் பிரச்சினைக்கும், அவர்களின் அவசர தேவைக்கும் உதவி புரிந்து, வியாபாரிகளின் முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக இருந்து வருகின்றனர். பேராவூரணியில் ஞாயிறுதோறும் நடைபெறும் சந்தை, பேராவூரணி பகுதியை சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் அன்றாட தேவை மொத்தமாக நிவர்த்தி செய்யும் வகையில் எளிய விலையில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. பேராவூரணியில் காவல் நிலையமும், ரயில் நிலையம் திறம்பட செயல்பட்டு வருகின்றன. மொத்தத்தில், பேராவூரணி பகுதி விவசாயிகளின் வாழ்விடமாகவும், வியாபாரிகளின் சொர்க்க பூமியாகவும் அமைதியின் உறைவிடமாகவும் இருந்து வருகிறது