மங்கலம் என்றால் நல்ல அறிகுறி காட்டும் பொருட்கள் எனலாம். அஷ்ட மங்கலங்கள் என்பன எட்டு திசைகளிலும் இருந்து சிவபெருமானின் மேன்மையை போற்றி அளிக்கப்பட்ட பொருட்களாகும்.
இந்துக்கள் பூரணகும்பம், ஸ்வஸ்திகம், வட்டக்கண்ணாடி, தீபம், குங்குமச்சிமிழ், சந்தனக்கிண்ணம், சங்கு மற்றும் தாம்பூலம் போன்றவற்றை மங்கல பொருட்களாக கருதுகின்றனர். திருமண விழா, பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா போன்ற இடங்களில் மங்கல பொருட்களை வைத்து சிறப்பாக விழாக்களை நடத்துவது இந்துக்களின் வழக்கம்.
மகா லக்ஷ்மி தேவியின் வடிவம் பூரண கும்பம். கும்பத்தில் நீரை நிரப்பி தேவியை அதில் ஆவாகரணம் செய்து வழிபடுவதே சிறந்தது. மழைக்கு அதிபதியாக விளங்கும் வர்ண பகவான் நீர் வடிவத்தில் கும்பத்துக்குள்ளிருந்து இல்லத்தின் தூய்மையை காக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
மங்கள சின்னங்களில் ஒன்று ஸ்வஸ்திக்.. செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்காக செல்லும் கோடுகள் இதில் இருக்கும். "ஸ்வஸ்தி" என்றால் "தடையற்ற நல்வாழ்வு"
ஸ்வஸ்திக்கில் உள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிக்கும். நாம் தொடங்கும் செயலுக்கு எட்டுத் திசைகளிலும் இருந்து, எவ்வித தீங்கும் நேராது தடுப்பதோடு, அது நிறைவேறவும் துணை நிற்கும் என்பது இதன் தத்துவம்..
உலகில் அனைவருக்கும் இன்ப, துன்பங்கள் சுழற்சியாக வரும் என்று கூறும் வடிவம் வட்ட வடிவக் கண்ணாடி .துன்பங்களை விலக்கி விடும் சக்தி வடிவம். நம் முகத்தை நாமே காண்பதால் ஒரு உத்வேகம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் கண்ணாடி மங்கலப் பொருட்களாக கருதப்படுகிறது.
பூஜை அறையில் அதிகாலை 4.30 மணி முதல் 6மணி வரை பிரம்ம மூர்த்தம் எனப்படும் இவ்வேளையில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வீட்டில் திருமகள் நிலைத்திருக்க தீப வழிபாடு ஏற்றது. முன்னொரு காலத்தில் இறைவனை ஒளியாக எண்ணி, தீபம் ஏற்றி வழிபட்டனர். நம் முன்னோர்கள் வகுத்த வழியில் நாமும் செல்வதே இறைவனை அடையும் வழியாகும்.
குங்குமச் சிமிழ் பெண்கள் திலகமாக வைக்கும் தெய்வீகக் குங்குமத்தைத் தாங்குகிற பேழை குங்குமச்சிமிழ் ஆகும். இல்லத்திற்கு வரும் சுமங்கலிகளை வரவேற்க குங்குமச்சிமிழ் பயன்படுகிறது.
அனைவரையும் ஈர்க்கும் தன்மையுள்ளது. சந்தனக்கிண்ணம். பழங்காலத்தில் "சந்தனப் பேலா" என்ற பெயரில் திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக சந்தனக் கிண்ணத்தில் சந்தனத்தை வைத்து இருப்பர். நாராயணின் தர்மபத்தினி மகாலட்சுமி வாசம் செய்வதும் சந்தனத்தில் தான். வீட்டு பூஜைகளிலும், விழா மேடைகளிலும் சந்தனம் மங்கல பொருளாக விளங்குகிறது.
வலம்புரி, இடம்புரி என இருவகையான சங்குகள் உள்ளன. வலம்புரி சங்கு வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்குவர். புதிய வீடுகள் கட்டும்போது நிலைவாசலில் சங்கு ஸ்தானம் என்ற விதிப்படி பூஜை செய்து பதிப்பார்கள். இதனால் குபேர சம்பத்து கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தாம்பூலம் வெற்றிலையும், பாக்கும் சேர்த்து வைப்பது தாம்பூலம் என்பர். மகாலட்சுமிக்கு விருப்பமான பொருள். வெற்றிலை நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதி தேவியும் உள்ளனர். அம்பாளுக்கு தாம்பூல நெய்வேத்தியம் செய்வது நல்லது. எந்த பூஜையானாலும் தாம்பூலப் பொருட்கள் வைத்து பூஜை செய்தால்தான் அந்த பூஜை நிவர்த்தி அடையும்.
அஷ்ட மங்கல பொருட்களை வீட்டில் வைத்து, செளபாக்கிய லக்ஷ்மி பூஜை செய்து வந்தால் இல்லத்தில் துர்சக்திகள் விலகி நல்லதே நடக்கும்.
கவிதா சரவணன்.