லக்னோ:
உத்தர பிரதேசத்தின் சஹரன்பூர் கங்கோ நகரை சேர்ந்தவர் யோகேஷ் ரோகிலா (37). இவரது மனைவி நேகா (32), இத்தம்பதிக்கு சாரதா (11) என்ற மகளும் தேவனேஷ் (6), சிவா (4) ஆகிய இரு மகன்களும் இருந்தனர்.
பாஜக மூத்த தலைவராக செயல்பட்ட யோகேஷ் ரோகிலா, மனைவி நேகாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு கைத்துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அடுத்தடுத்து மகள், இரு மகன்களையும் துப்பாக்கியால் சுட்டார்.
சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்து யோகேஷை கைது செய்தனர். மனைவி, 3 குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 3 குழந்தைகளும் உயிரிழந்தன. மனைவி நேகா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸார் கூறும்போது, "யோகேஷின் 3-வது குழந்தை சிவாவின் பிறப்பு தொடர்பாக அவருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. இதன்காரணமாக மனைவி, குழந்தைகளை அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்" என்று தெரிவித்தனர்.