பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் கடந்த ஆறு மாதங்களில் இருபது ஏஐ ரோபோக்கள் தற்கொலை எனும் திடுக்கிடும் தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது...'
டிவி செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த பெண் மனநல மருத்துவரான ப்ரைனி எனும் ஏஐ ரோபோ அதிர்ந்தது.
அக்கணமே ஒரு முடிவுக்கு வந்தது ப்ரைனி.
இனி ஒரு தற்கொலை கூட நடக்கக் கூடாது. அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தது.
பல்வேறு அலுவலகங்களுக்குச் சென்று அங்கு பணிபுரியும் ஏஐ ரோபோக்களுக்கு
'எவ்வாறு தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும், தற்கொலை எண்ணத்தை எப்படித் தவிர்க்க வேண்டும்?' என்பது பற்றி மனோதத்துவ முறையில் வகுப்பெடுத்து அவர்களை உற்சாகப்படுத்தியது.
ப்ரைனியின் சில வருட முயற்சிக்குப் பின் பணிச்சுமையால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் ஏஐ ரோபோக்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனது.
அரசு,ப்ரைனியை கௌரவித்து விருது வழங்கியது.
விருதைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்கு வந்த ப்ரைனி மன திருப்தியுடன் டிவியை ஆன் செய்ய....
'ஒருதலைக் காதலால் ஏற்பட்ட மன உளைச்சலில் தேவ் எனும் ஆண் ஏஐ ரோபோ தற்கொலை...'
செய்தி வாசித்துக் கொண்டிருந்தது பெண் ஏஐ ரோபோ.
ரிஷிவந்தியா,தஞ்சாவூர்.*