மதுரை, ஏப். 12–
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 7ல் நடைபெறும்’ என, நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள்படி மத்திய சுற்றுச்சூழல் துறையின் கீழ் உள்ள வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது.
கோவிலை சுற்றிலும் 1 கி.மீ.,யில் கட்டுமானம் மேற்கொள்ள, தொல்லியல்துறை அனுமதி பெற வேண்டும். ஆகம விதிப்படி புனரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். இந்நடைமுறைகளை பின்பற்றவில்லை. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள்படி மேம்பாட்டு பணி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு மனுவை விசாரித்தது. இவ்வழக்கில், எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட தனியார் நிறுவனம் தரப்பு, ‘இம்மனு நிலுவையில் உள்ளதால், கோவில் பணிகள் மெதுவாக நடைபெறுகிறது’ என, தெரிவித்தது. அரசு தரப்பில், ‘ஜூலை 7ல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என, தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இரு மனுதாரரின் வழக்கறிஞர் உட்பட அனைத்து தரப்பினரும் திருப்பணிக்கு எந்த தடையும் இல்லை என ஒப்புக் கொண்டனர். ஏற்கனவே நிலுவையிலுள்ள மற்றொரு வழக்குடன், இந்த வழக்கை சேர்த்து, ஜூலை 14ல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்’ என, உத்தரவிட்டனர்.