லக்னோ, ஏப்.14:
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம் ஆகியோரது அதிரடியால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷுப்மன் கில் 38 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், சாய் சுதர்சன் 37 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 56 ரன்களும் விளாசினர். ஜாஸ் பட்லர் 16, வாஷிங்டன் சுந்தர் 2, ஷேர்பேன் ரூதர்போர்டு 22, ராகுல் டெவாட்டியா 0 ரன்களில் நடையை கட்டினர். ஷாருக் கான் 11, ரஷித் கான் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஒரு கட்டத்தில் குஜராத் அணி 12 ஓவர்களில் 120 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. இதனால் அந்த அணி 220 ரன்களை வரை குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிரடியாக விளையாடி வந்த ஷுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடியை அவேஷ் கான் 13-வது ஓவரின் முதல் பந்தில் பிரித்தார். தொடர்ந்து 14-வது ஓவரின் முதல் பந்தில் சாய் சுதர்சனை, ரவி பிஷ்னோய் ஆட்டமிழக்கச் செய்தார். இந்த இரு விக்கெட்களும் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
நடுவரிசையில் வாஷிங்டன் சுந்தர், ஜாஸ் பட்லர் ஆகியோரை முறையே ரவி பிஷ்னோய், திக்வேஷ் ராத்தி ஆகியோர் விரைவிலேயே பெவிலியனுக்கு திருப்பினர். பின்வரிசையில் ரூதர்போர்டு 19 பந்துகளை எதிர்கொண்ட போதிலும் அவரால் பெரிய அளவில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ள முடியாமல் போனது. ரூதர்போர்டையும், ராகுல் டெவாட்டியாவையும் ஷர்துல் தாக்குர் ஆட்டமிழக்கச் செய்து இறுதிப்பகுதியில் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார். கடைசி 8 ஓவர்களில் குஜராத் அணியால் வெறும் 60 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. லக்னோ அணி சார்பில் பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் திக்வேஷ் ராத்தி, அவேஷ் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
181 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான எய்டன் மார்க்ரம் 31 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 58 ரன்களும், நிகோலஸ் பூரன் 34 பந்துகளில், 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 61 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் 18 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களும், டேவிட் மில்லர் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆயுஷ் பதோனி 20 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நடப்பு தொடரில் 4-வது வெற்றியை பதிவு செய்தது.
அந்த அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியது. அதேவேளையில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்றிருந்த குஜராத் டைட்டன்ஸ் தோல்வியை அடைந்துள்ளது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு இறங்கியுள்ளது. ஆட்ட நாயகனாக லக்னோ அணியின் எய்டன் மார்க்ரம் தேர்வானார்.