tamilnadu epaper

ரஷ்ய தாக்குதலில் 16 பேர் பலி: உக்ரைன் அதிபர் கடும் கண்டனம்

ரஷ்ய தாக்குதலில் 16 பேர் பலி:   உக்ரைன் அதிபர் கடும் கண்டனம்

கீவ், ஏப். 5


உக்ரைனில் ரஷ்யா நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.


ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா, உக்ரைன் ஆகிய 2 நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. இதுதொடர்பாக ரஷ்யா-உக்ரைன் இடையே விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


இதனை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “ரஷ்யா அமைதியை விரும்பவில்லை என்பதற்கான தெளிவான மற்றும் கசப்பான சான்றாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது. ரஷ்யாவின் ஒவ்வொரு நாளும் தொடரும் தாக்குதல்கள் அப்பாவி மக்களின் உயிர்களை பறித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த வன்முறை நீடிப்பதற்கு ஒரே காரணம் ரஷ்யா போர் நிறுத்தத்தை விரும்பாததுதான். இது உலகத்துக்கே தெரியும்.


ரஷ்யாவின் மீது சர்வதேச சமூகம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் மூலமும், உக்ரைனின் விமான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும், நமது இராணுவத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் மூலமே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்” என்று ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்த தாக்குதல் குறித்தோ, உன்ரைன் அதிபரின் குற்றச்சாட்டு குறித்தோ, ரஷ்யா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.