அமெரிக்க அரசு மெட்டா நிறுவனம் மீது நம்பிகையற்ற வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பான முதற்கட்ட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் விசித்திரமான யோசனை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் தளத்தில் பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க அவர்களின் நண்பர்கள் பட்டியல் முழுவதையும் நீக்கி மீண்டும் முதலிலிருந்து புதிதாக நண்பர்களுடன் இணைவதை ஊக்குவிக்கலாம் என மார்க் ஸக்கர்பெர்க் மெட்டா ஊழியர் ஒருவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு செய்தி அனுப்பியுள்ளார்.
இதன்மூலம், ஃபேஸ்புக் தளத்தில் பயனர்களை அதிகநேரம் செலவிட வைக்கலாம் என அவர் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், ஃபேஸ்புக் தலைவர் டாம் அலிசன் உள்பட மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் பலரும் அப்போது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஃபேஸ்புக் தளத்தை நண்பர்கள் சார்ந்த மாடலாக இல்லாமல், பின்தொடர்பவர்கள் (ஃபாலோயர்ஸ்) சார்ந்த மாடலாக மாற்றவும் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அதுவும் செயல்படுத்தப்படவில்லை.