tamilnadu epaper

அணு ஆயுதம் உற்பத்தி செய்யும் ஈரான்; சர்வதேச அணுசக்தி நிறுவனம் எச்சரிக்கை

அணு ஆயுதம் உற்பத்தி செய்யும் ஈரான்; சர்வதேச அணுசக்தி நிறுவனம் எச்சரிக்கை

தெஹ்ரான், ஏப் 17


அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையை ஈரான் நெருங்கியுள்ளதாக ஐ.நா., சபையின் அணு ஆயுத கண்காணிப்புக் குழுவின் தலைவர் ரபேல் குரோஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது. அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்பது அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.


பிறகு அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதன் பிறகு அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும், ஈரான் தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் ஈரான் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, அணுஆயுத தயாரிப்புக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ஈரானுக்கு அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார்.


இந்தச் சூழலில், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்தை நடத்தப்பட்டது. ஆக்கப்பூர்வமான முறையில் பேச்சுவார்த்தை நடந்தாலும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து, வரும் 19ம் தேதி இருநாடுகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையை நெருங்கியுள்ளதாக ஐ.நா., சபையின் அணு ஆயுத கண்காணிப்புக் குழுவின் தலைவர் ரபேல் குரோஸி எச்சரிக்கை விடுத்துள்ளார். அணு ஆயுத தயாரிப்பு குறித்து ஈரான் நாட்டு அதிகாரிகளுடன் தெஹ்ரானில் பேச்சு நடத்துவதற்கு முன்பாக இந்த எச்சரிக்கையை விடுத்தார்.


மேலும், அவர் பேசுகையில், ‘ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளது. ஒருநாள் அதனை அவர்கள் இணைப்பார்கள். எங்களிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்று வாய்மொழியில் சொல்லும் உத்தரவாதங்களை விட, ஆதாரப்பூர்வமான உத்தரவாதங்களையே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. எனவே, நாங்கள் அதனை உறுதி செய்ய வேண்டும்’ எனக் கூறினார்.