என்ன ஒரு அநியாயம் யார இந்த காலத்துல நம்பறதுனே தெரியல, நல்லவன் மாதிரி இருக்கிறானுங்க ,அம்பி மாதிரி சொல்றதெல்லாம் தலையாட்டுறாங்க அப்புறம் அவனுங்க புத்தி காமிச்சர்றானுங்க ,
வாக்கிங் போயிட்டு வந்தவர் மனைவி புலம்புவதை கேட்டு யாரிடம் ஏமாந்தாய் , ஏன்? இப்படி புலம்பிக்கிட்டு இருக்க
என்ன நான் மட்டுமா ஏமாந்தேன் நம்மள எல்லாரையும் ஏமாத்திட்டாங்க உங்க மாப்பிள்ளை
அவருக்கு என்ன நல்லா தானே இருக்கார் நம்ம பொண்ணு கல்யாணத்த பத்தி பேசிட்டு வந்துருவோம் நீயும் வரியா,
அதுக்கெல்லாம் அவசியமே இல்லை அவரு வேற நல்ல பெண்ணை பாத்துட்டாராம்.
உனக்கு யார் சொன்னா?
இப்பதான் நம்ம பிரீத்தி கிட்ட போன் பண்ணி பேசினாரு
சரி நான் போய் நேர்ல பேசிட்டு வரேன் நீ புலம்பாம உன்னோட வேலைய பாரு ,
மாப்பிள்ளையின் வீட்டின் அருகே போகும்போதே குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது மாப்பிள்ளை குழந்தையை கொஞ்சிகொண்டே ஆபீஸ்க்கு தயாராகிக் கொண்டிருந்தார் .
வாங்க மாமா
நேரா விஷயத்துக்கே வரேன்
தனியா வண்டி எடுத்துட்டு போகாதுன்னு சொல்ல சொல்ல கேட்காம விபத்துல சிக்கி இறந்துட்டா ,உங்களுக்கும் இந்த குழந்தைக்கும் ஆதரவா இருக்கட்டுமேன்னு தான் என்னோட இரண்டாவது மகளை கல்யாணம் பண்ணி கொடுக்க நினைத்தேன்.ஆனா நீங்க வேற முடிவு எடுத்து இருக்கிறதா கேள்விப்பட்டேன் பிரீத்தியோட மனசு என்ன பாடுபடும் யோசிச்சிங்களா,
நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கிறேன் ப்ரீத்தி கிட்ட பேசிட்டேன். என் குழந்தையை காரணம் காட்டி தான் நீங்க சம்மதிக்க வச்சிருக்கீங்க
இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது பிரச்சனை வரும். ப்ரீத்திக்கு நல்ல வரனா பார்த்து கல்யாணம் பண்ணுங்க .
நான் , மாற்றுத்திறனாளியாகிய என் நண்பரின் தங்கையை திருமணம் செய்ய சம்மதித்திருக்கிறேன்.என்று மாப்பிள்ளை சொல்லவும்
மாப்பிள்ளை எப்பொழுதும் அம்பி தான் என்ற சந்தோஷத்தில் சம்மதம் தெரிவித்தேன்.
சங்கரி முத்தரசு கோவை.