tamilnadu epaper

ஆன்மீக சிந்தனைகள்!

ஆன்மீக சிந்தனைகள்!

ஆன்மீகம் மனிதநேயம்
இரண்டும் இல்லாமல்
உலகம் அமைதியுடன் 
சுழலப் போவதில்லை !

இனிக் கோவில்களில்
மனிதக் கூட்டங்களோடு
மனித நேயத்தையும் 
கனிவுடன் நிரப்புங்கள் !

ஆன்மிகம் மனிதநேயம்
கைகோர்த்து செல்லும்போது
சுனாமி அலைகள்கூட 
சுருண்டு விடும்
சூறாவளி காற்றுகூட 
தென்றலாக மாறி விடும் !

ஆன்மீகம் மனிதநேயம்
ஆரத் தழுவிச் சென்றால் 
குண்டுகள் முழங்காது
குருதிகள் கொட்டாது
சுட்டெரிக்கும் சூரியன்
சுடுவதை நிறுத்திடுவான் ! 

ஆர்ப்பரிக்கும் கடலில்
காகிதக் கப்பல் கூட 
சிதைந்து விடாமல்.
கரை சேர்ந்து விடும் !

வெண்ணிலவு கூட 
விண்ணில் ஓய்வில்லாமல்
முழுநிலவாக முப்பதுநாளும் 
வானில் பவனி வரும் !

உயிர்க்கொலை புரிதலை
உள்ளத்தில் எண்ணாமல் 
உயிர் இரக்கத்துடன் 
எவ்வுயிரையும் நேசிப்போம் !

வாடிய பயிரைக் கண்டு 
வாடிய வள்ளலார் 
வழியில் செல்வோம்  
ஆன்மிகம் மனிதநேயம்
இரண்டும் கைகூப்பி 
முன் நின்று வரவேற்கும்!

    கவிஞர் பூ. சுப்ரமணியன்
    பள்ளிக்கரணை, சென்னை