புவனேஸ்வர்:
ஒடிசாவில் ரூ.4,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான நிதின் கட்கரி நேற்று ஒருநாள் பயணமாக ஒடிசா வந்தார். ஒடிசா முன்னாள் முதல்வர் ஹரேகிருஷ்ணா மகதாப்பின் 125-வது பிறந்த நாளையொட்டி கட்டாக்கில் உள்ள ராவென்ஷா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நினைவு சொற்பொழிவில் கலந்துகொண்டார்.
கட்கரி பிற்பகலில் புவனேஸ்வரில் உள்ள உலகத் திறன் மையத்துக்கு வருகை வந்தார். இதையடுத்து பாரமுண்டா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ரூ.4,000 கோடி மதிப்பிலான 19 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை கட்கரி தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் உரையாற்றினார்.
குர்தா, புரி, கஞ்சம், கந்தமால், நயாகர் ஆகிய மாவட்டங்களில் 105 கி.மீ நீள சாலைகள் இத்திட்டங்களில் அடங்கும். மேலும் பனார்பால்-கோடிபந்தா சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றுதல், என்எச் 59-ல் டாரிங்பாடி காட் பகுதியை அகலப்படுத்துதல், என்எச் 10-ல் மங்கல்பூர் முதல் காயங்கோலா வரை அகலப்படுத்துதல் ஆகியவையும் இத்திட்டங்களில் அடங்கும்.