குலதெய்வத்துக்கு அலங்காரம் செய்தாகிவிட்டது.
பங்காளிகள் அனைவரும் குடும்பத்துடன் வந்து வெகு நேரம் ஆகிவிட்டது.
தாய்மாமன் தயார்.
மற்ற உறவினர்களும் நண்பர்களும் வந்த வண்ணம் இருந்தனர்.
அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார் தனது இரண்டாவது மகனுக்கு கடா வெட்டி காது குத்தப் போகும் சுரேந்தர்.
கழுத்தில் மாலையுடன் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு வெட்டுப்பட தயாராக நின்று கொண்டிருந்தது ஆடு- கண்களில் மரண பயத்துடன்.
சற்று நேரத்தில் அதீத அலறலுடன் ஆடு வெட்டப்பட்டு, குழந்தையை தாய் மாமன் மடியில் அமர வைத்து காது குத்தும் வைபவம் தொடங்கியது.
காது குத்தும்போது குழந்தை வலியால் துடித்து அலறியதைக் கண்ட, இரண்டாம் வகுப்பு படிக்கும் சுரேந்தரின் மூத்த மகன் ஆதர்ஷ், அவரிடம் கேட்டான்-
"சின்ன ஊசியால காதுல குத்தும்போதே தம்பி பாப்பா இப்படி வலியால கத்துறானே... அந்த ஆட்டுக்கு எப்படி வலிச்சிருக்கும் டாடி?"
'சுருக்'கென தைத்தது சுரேந்தருக்கு!
*- ரிஷிவந்தியா,தஞ்சாவூர்.*
----------------------------------------------