tamilnadu epaper

குடியுரிமை இல்லாதவர்கள் வாக்களிக்கக்கூடாது: சட்டத்தில் கையெழுத்திட்டார் டிரம்ப்

குடியுரிமை இல்லாதவர்கள் வாக்களிக்கக்கூடாது: சட்டத்தில் கையெழுத்திட்டார் டிரம்ப்

வாஷிங்டன், மார்ச் 26


குடியுரிமை இல்லாதவர்கள் வாக்களிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விதிகளை கடுமையாக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.


இனி நடைபெற இருக்கும் பொதுத் தேர்தல்களில் குடியுரிமைச் சான்று கட்டாயம் மற்றும் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே, வாக்குச் சீட்டுகள் கிடைக்கப் பெறுதல் உள்ளிட்ட தேர்தல் விதிகளை கடுமையாக்கும் சட்டத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.


இதற்கு முந்தைய அமெரிக்க அரசு தேர்தல் நடத்துவதில் அடிப்படை மற்றும் தேர்தல் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ள அவர், மாநிலங்கள் அரசின் கொள்கைகளுக்கு இணங்கத் தவறினால், அரசின் நிதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல் விதிகள் மீது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் இருப்பதால், இந்த உத்தரவு சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் இருந்தே அதிபர் டிரம்ப், தேர்தல் நடைமுறைகள் குறித்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தார். மேலும், கடந்த 2020 ம் ஆண்டு தேர்தலில் தான் தோல்வி அடைந்ததற்கும் இந்த மோசடியே காரணம் எனத் தெரிவித்திருந்தார்.


பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு குடியுரிமை அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், குடியுரிமை அல்லாமல் வாக்களிப்பது சட்டவிரோதமானது என்றும், அவர்கள் நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கக்கூடும் என்று வாக்காளர்களுக்கான உரிமைக் குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன. மேலும், இதில், அமெரிக்க குடிமக்களில் 9 சதவிகிதம் பேருக்கு குடியுரிமை இல்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பலர் பிறப்புச் சான்றிதழில் தங்களில் இயற்பெயரை மட்டுமே குறிப்பிடுவதாலும், திருமணமான பெண்கள் தங்கள் பெயரை மாற்றுவதில் சில சிக்கல்கள் இருப்பதாலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.