tamilnadu epaper

குமரி மாவட்டத்தில் தொடர் மழை வெள்ள அபாய எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் தொடர் மழை   வெள்ள அபாய எச்சரிக்கை


நாகர்கோவில், ஜூன் 1

குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் அணை பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 பேச்சிப்பாறை அணையை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:  

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகளவு மழை பொழிவதால் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 43 அடியாகவும் நீர் வரத்து 2195 கன அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 55.35 அடியாகவும் நீர் வரத்து 1402 கன அடியாகவும், உபரி நீர் வெளியேற்றம் 22 கன அடியாகவும், சிற்றார் 1 அணையின் நீர் மட்டம் 7.94 அடியாகவும் நீர்வரத்து 133 கன அடியாகவும், சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 8.03 அடியாகவும், நீர்வரத்து 212 கன அடியாக உள்ளது, 

மேலும் தொடர்ந்து மழை பொழியும் போது நீர் வரத்து அதிகரிக்கும். இதனால் அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படும் சூழ்நிலை ஏற்படின் அணையின் மதகு பாதுகாப்பு தன்மை, பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்கள், நீர் வழித்தடங்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேச்சிப்பாறை நீர்மட்டம் வெள்ள அபாய கட்டத்தை எட்டியதை தொடர்ந்து பேச்சிப்பாறை அணைப்பகுதி, குழித்துறை தாமிரபரணி ஆற்று கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்,