tamilnadu epaper

சிறப்பு நீதிமன்றத்தில் 6–ந் தேதி ஆஜராக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு உத்தரவு

சிறப்பு நீதிமன்றத்தில் 6–ந் தேதி ஆஜராக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு உத்தரவு

சென்னை, ஏப். 17


அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 6 ந் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல்,கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா இருவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கு தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீதான குற்ற வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு நிலுவையில் உள்ளது.


தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட மா.சுப்பிரமணியம், காஞ்சனா இருவரும் நேரில் ஆஜராக வில்லை. மா.சுப்பிரமணியன் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் அமைச்சரவை கூட்டம் உள்ளதால் இன்றைய விசாரணைக்கு நேரில் ஆஜராக விளக்கு அளிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி ஜெயவேல் குற்றச்சாட்டு பதிவிற்கு ம.சுப்பிரமணியம், அவரின் மனைவி காஞ்சனா இருவரும் மே 6 ந் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். அன்று இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என தெரிவித்து விசாரணையை மே 6 தேதிக்கு தள்ளிவைத்தார்.