குடியாத்தம், மே 13–
மதுரையில், மே 10ம் தேதி அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்தும் விதமாக, ‘ராணுவ வீரர்கள் எல்லையில் போய் சண்டையா போட்டனர்; கருவியை வாங்கி கொடுத்தது மத்திய அரசு. பாராட்ட வேண்டியது பிரதமர் மோடியை. அதை விட்டுவிட்டு, ராணுவ வீரர்களுக்கு பராட்டு தெரிவித்து தீர்மானம் போடுகின்றனர். நாடகம் நடத்துகின்றனர்’ என, விமர்சனம் செய்திருந்தார்.
இதை கண்டிக்கும் விதமாக, வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில், தமிழக ஒருங்கிணைந்த முன்னாள் படை வீரர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், செல்லூர் ராஜுவின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துசென்று, படத்தை செருப்பால் அடித்தும், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், ‘செல்லூர் ராஜு மன்னிப்பு கேட்கும் வரை இந்த போராட்டம் தொடரும். தமிழகம் முழுவதும், முன்னாள் ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபடுவர்’ என்றனர்.