தூத்துக்குடி
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் பணம், நகை, தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணிக்கு கோவில் தக்கார் அருள்முருகன் தலைமை வகித்தார். இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார்.
நாகர்கோவில் உதவி ஆணையர் தங்கம், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, அறநிலையத்துறை ஆய்வாளர் செந்தில் நாயகி ஆகியோர் மேற்பார்வையில் சிவகாசி பதிணெண் சித்தர் மடம் குரு குல வேதபாட சாலை உழவாரப் பணிக் குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.
உண்டியல்கள் மூலம் ரூ.4 கோடியே 64 லட்சத்து 95 ஆயிரத்து 186, 1 கிலோ 74 கிராம் தங்கம், 30 கிலோ 450 கிராம் வெள்ளி பொருட்கள், 1,530 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளன.