tamilnadu epaper

தூரிகைச் சிறகுகள்

தூரிகைச் சிறகுகள்

 

ஆசிரியர்: ம . திருவள்ளுவர் 

விலை : ₹200

வெளியீடு: அகநி

தொடர்புக்கு: 94443 60421

ஹைக்கூ மற்றும் நவீன கவிதைகளின் தொகுப்பாக இந்நூல்.


அதில் ரசித்த சில கவிதைகள் இங்கே உங்கள் பார்வைக்கு:


காற்றுக்காக திறந்த ஜன்னல் 

வழிவிடுகிறது 

கொசுவிற்கும், தூசுக்கும்.


ஓயாது அலறும் தொலைபேசி 

ஊருக்குச் சொல்லும் 

வீட்டில் ஆளில்லை.


முயலும் ஆமையாகிப் 

பின்தங்கித் தோற்றது 

முயலாமையால்.


இதைப் படித்ததும் கலைவாணர் "NSK " நினைவுவந்தது‌. கவிஞர் "வாலியிடம்" முயல் ஆமையிடம் தோற்றது ஏன்? என அவர் கேட்க, 

முயல் ஆமையால் என வாலி தயங்க , அதையே வேகமாகச் சொல் என்றதும், முயலாமையால் எனக் கூற, கலைவாணர் தமிழ் உனக்கு சோறு போடும் ஆனா கொஞ்சம் லேட்டா போடும் என்றாராம்.



நவீன கவிதைகள்:


நானில்லாதிருந்த போது


வழியில் 

எதிர்ப்பட்டவர்களை வினவினேன் 

எங்கு போகிறீர்கள் என்று 


களைத்துப்போய் காணப்பட்டவர்கள் 

கடவுளைக் காணவென்றார்கள் 


ஒரு சிலர்

எதிர்கேள்வி கேட்டார்கள் 

" நீ எங்கே செல்கிறாய்" என்று 


" என்னைத் தேடி..."

என்றவனை 

ஏதோ மாதிரி பார்த்தபடி விரைந்தார்கள்


நிதானமாய் நடந்து

என் இடமடைந்தபோது

எல்லோரும் சொல்கிறார்கள்


நானில்லாதிருந்தபோது

என்னைத் தேடி

இறைவன் வந்திருக்கிறான் என்று 



கால்களுக்கு ஒரு கணை:


போலிகளுக்கு இடம் கொடுத்து

சகல வக்கிரமும் நெஞ்சில்

உக்கிரங் கொண்டாட


கால்கள் மட்டும் ஏன் 

காலங்காலமாய் 

ஏதுமறியாதது போல


கோயில்களை நோக்கிப்

பயணம் புரிகின்றன 



-ஸ்ரீகாந்த்

திருச்சி