கும்பகோணம், ஜூன் 1
தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் கோவிலில் அம்மன் அருவமாக இருப்பதால், தீப வழிபாடு மட்டும் நடக்கிறது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் அமாவாசையை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று சமயபுரம் மாரியம்மன் வளையல் மற்றும் மல்லிகைப் பூவுக்காக, இந்த கோவிலில் 15 நாட்கள் தங்கியிருந்ததாக ஐதீகம். இந்த நாட்கள் 15 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது,
இந்த ஆண்டு விழா மே 28-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில் ஆகாச மாரியம்மனாக சமயபுரம் மாரியம்மன் எழுந்தருளினார். நேற்று காலை நாச்சியார்கோவில் கோவிலை வந்தடைந்தார். இந்நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் மல்லிகைப் பூ தூவி வணங்கினர். ஜூன் 20-ம் தேதி வரை பல்வேறு அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பிரதான நிகழ்ச்சிகளாக ஜூன் 8-ம் தேதி பெரிய திருவிழா நடக்கிறது. ஜூன் 11-ம் தேதி அம்மன் சமயபுரத்துக்கு திரும்புகிறார்.