tamilnadu epaper

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் வருமா?

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் வருமா?

கோடை விடுமுறை முடிந்து வெயிலைப் பொருத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.


மேலும் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மே தினமான இன்று தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் முன்னிலையில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கும், மே தின நினைவுச் சின்னத்திற்கும் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.


இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.


தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,


இந்த சமுதாயத்திற்காக உழைக்கக்கூடிய அனைத்து தொழிலாளர்களுக்கும், பத்திரிகைத் துறை சார்ந்தவர்களுக்கும், ஒவ்வொருவரும் அந்தந்த சமூகத்திற்காக ஒவ்வொரு வகையிலும் உழைத்து வருகின்றனர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் மே தின வாழ்த்துக்களை, தொழிலாளர்கள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய கேள்விக்கு,


தமிழக முதல்வர் கேள்வி எழுப்பியிருக்கிறார். எப்பொழுது சாதிவாரி கணக்கெடுப்பு ஆரம்பிக்கும், எப்பொழுது முடிவடையும் என்று இல்லாமல் அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள். பிகாருக்கு அடுத்து தேர்தல் வர உள்ளது, 5 மாநில தேர்தலும் வரவுள்ளது. இந்த தேர்தல் காலம் முடியும் வரை இதுபோல் பலவிதமான அறிவிப்புகளை அவர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம். அறிவிப்பு அறிவிப்பாக இருக்கக் கூடாது அதனை செயல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் எதற்கும் தயாராக உள்ளார் என்று தெரிவித்தார்.


பள்ளிகள் திறப்பு பற்றி,


திருச்சி மாவட்டத்தில் தற்போது 104 டிகிரி வெயில் உள்ளது. ஜூன் மாதம் 2 ஆம் தேதி திறக்க முடிவு செய்துள்ளோம். கோடை விடுமுறை முடிந்து அன்றைய தினம் வெயிலின் தன்மையைப் பொருத்து முதல்வர் முடிவு செய்வார்.


தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது அதிக அளவு கட்டணம் வாங்கப்படுகிறது என்ற கேள்விக்கு,


அதிகம் அளவு கட்டணம் வாங்கக் கூடாது அதற்காக கட்டண நிர்ணய ஆணையமே வைத்துள்ளோம். முன்னாள் நீதி அரசர் தலைமையில் கமிட்டி என்ன சொல்கிறதோ அதன்படி வாங்க வேண்டும். நிர்ணயித்திருப்பதைக் காட்டிலும் அதிகப்படியாக கட்டணம் வாங்கினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரும் 2026 தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாகக் கூட வராது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு,


அது அவருடைய எண்ணம், கட்சி ஆரம்பித்தால் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்கிறார்.


தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் மட்டும்தான் எதிர்க்கிறது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது பற்றிய கேள்விக்கு,


தேசிய கல்விக் கொள்கை என்பது மொழி சார்ந்தது இல்லாமல் பல்வேறு சரத்துக்கள் உள்ளது. இடைநிறுத்தம் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. இடைநிறுத்தல் அதிகப்படுத்தும் வேலையைத்தான் அவர்கள் செல்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் 3, 5, 8 பொதுத் தேர்வுகள் மூலமாக குழந்தைகள் இடைநிறுத்தல் அதிகமாக இருக்கும், ஆசிரியர்களை வஞ்சிக்கக்கூடிய, மாணவர்கள் நலம் சார்ந்த வஞ்சிக்ககூடிய பல கருத்துக்கள் அதில் உள்ளன.


நாம் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். மும்மொழிக் கொள்கை ஒன்பது ஒரு ஃபெயிலியர் சிஸ்டம். அதை பின்பற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது.


6,000 ஆசிரியர்களின் நியமனம், நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். தீர்ப்பு வந்தவுடன் உடனடியாக பணியிடங்கள் நிரப்பப்படும்.


கூட்டணியில் வேறு கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, தமிழக முதல்வர், தலைமைக் கழகம் எடுக்க வேண்டிய முடிவு எனத் தெரிவித்தார்.