புதுடெல்லி:
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர், இது காஷ்மீரின் சுற்றுலா துறைக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியது. அதன்பின் காஷ்மீர் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா உட்பட சில நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியது.
இதனால் பெரும்பாலான உணவு மற்றும் தங்கும் விடுதிகள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் படகு வீடுகள் காலியாகிவிட்டன. அனைத்து வகை தங்கும் விடுதிகளில் சுமார் 12 லட்சம் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.
அதன்பின் இந்தியா - பாகிஸ்தான் மோதல் பதற்றத்தை மேலும் அதிகரித்தது. எனினும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு காஷ்மீரில் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் மக்கள், சுற்றுலா துறையுடன் தொடர்புடையவர்கள் நிம்மதி பெருமூச்சு விட தொடங்கியுள்ளர். தற்போது பதற்றம் தணிந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மீண்டும் காஷ்மீருக்கு அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஜம்மு காஷ்மீர் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் முஷ்தாக் அகமது சாயா கூறும்போது, “வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் கணிசமான எண்ணிக்கையில் வருவார்கள். நாடு முழுவதும் உள்ள பல சுற்றுலா நிறுவனங்கள் ஏற்கெனவே எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.
இவர்கள் மீண்டும் புதிய முன்பதிவுகளை செய்ய தொடங்கி விட்டனர். காஷ்மீரில் சுற்றுலா நடவடிக்கைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும். சுற்றுலா பயணிகளை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம். வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடிகளை வழங்குவோம், இதற்கான ஒரு சிறப்பு திட்டத்தை முதல்வர் உமர் அப்துல்லா அறிவிக்க உள்ளார்” என்றார்.
இதற்கிடையில், காஷ்மீரில் வர்த்தகம் மற்றும் தொழில் துறை சபை சார்பில் தொழில் துறை பங்குதாரர்களின் அவசர கூட்டம் நகரில் நடைபெற்றது. இதுகுறித்து தொழில் துறை சபையின் ஜம்மு காஷ்மீர் மாநில தலைவர் தாரிக் கனி கூறும்போது, “சுமார் 20 லட்சம் பேர் இந்த தொழிலுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைந்துள்ளனர்.
எனவே, சுற்றுலா துறையை மீட்டெடுக்க சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் மற்றும் பிற தொடர்புடைய துறைகளுடன் இணைந்து புதிய உத்திகளை உருவாக்கி வருகிறோம். வரும் நாட்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திப்போம்” என்றார்.