மதுரை, ஏப்.3௦–
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் சுவாமி சன்னதி முன் கொடியேற்றப்பட்டது. இதில் மதுரை மேயர் இந்திராணி, கலெக்டர் சங்கீதா, காவல் ஆணையாளர் லோகநாதன், கோவ।ல் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் மற்றும் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவிழா நாட்களில் தினமும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை வீதி உலா வருகிறார்கள். மே 6 முதல் முக்கிய நிகழ்வாக அம்மன் பட்டாபிஷேகம் இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் நடக்கிறது. மே 7 திக்குவிஜயத்தை தொடர்ந்து மே 8 ம் தேதி காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 9 மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மே 11 கள்ளழகர் எதிர்சேவை, மே 12ல் ஆற்றில் சுவாமி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.