tamilnadu epaper

மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்.

மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்.

புல்லாங்குழலுக்கேற்ற மூங்கிலைத் 
தேடியலைகிறேன் அடர்வனத்துள் .

கால் தடுக்கும் வேர் முடிச்சுகள் 
உடலைக் கீறும் மூங்கில் இலைகள் 

நீண்டவரிசையில் நெடிதுயர்ந்த 
புதர்களைப் புறமொதுக்கி

வேய்ங்குழலுக்கேற்ற ஒன்றைத் தேடி 
வியர்த்துக்  களைத்த என் கண்களில் 

கரும்புள்ளித் துளைகளோடு நெடிய  
காட்டு மூங்கிற் தண்டினுள்

காம்போதியை இசைத்துச் சுழன்றபடி  
மின்னலென வெளியேறிய கருவண்டின்  

ரீங்காரத்தில் கண்டுகொண்டேன் 
என் தேடலுக்கான விடையொன்றை!

=தனலெட்சுமி பாஸ்கரன்,திருச்சி.