tamilnadu epaper

வேண்டும் வேண்டும்

வேண்டும் வேண்டும்


கனிவான சொற்களையே பேச வேண்டும்

     காற்றாக எண்திசையும் வீச வேண்டும்

இனிதான செயல்களையே செய்ய வேண்டும்

     இதயத்தில் கருணையினை உய்ய வேண்டும்

தனிப்பாதை நமக்காக போட வேண்டும்

     தன்னுழைப்பால் நாமுயர்ந்து வாழ வேண்டும்

தனித்திறனை மெருகேற்றி வளர்க்க வேண்டும்

     தரணியிலே நம்புகழை நாட்ட வேண்டும்


பண்பிற்கே முதலிடத்தைத் தருதல் வேண்டும்

     பணத்தாசை விட்டொழிக்க பழக வேண்டும்

மண்போற்றும் சேவைகளில் நாட்டம் வேண்டும்

     மனிதந்தான் உயர்வென்று முழங்க வேண்டும்

விண்ணளவு நம்நோக்கம் உயர வேண்டும்

     விரிவான சிந்தனையில் மூழ்க வேண்டும்

எண்ணத்தை நேர்மறையாய் மாற்ற வேண்டும்

     எழுகதிராய் தினந்தோறும் ஒளிர வேண்டும்


சலிப்பின்றி வாழ்ந்திடவே ஊக்கம் வேண்டும்

     சலனமின்றி வாழத்தான் பயில வேண்டும்

நலிவில்லா மனத்தைத்தான் நாட வேண்டும்

     நன்னெறியை நாள்தோறும் நவில வேண்டும் 

வலிமையோடு எதையும்தான் அணுக வேண்டும்

     வரமென்று வாழ்வைத்தான் நினைக்க வேண்டும்

வலிதந்த பாடங்களைக் கற்க வேண்டும்

     வழிகாட்டி நாமெனவே உணர்த்த வேண்டும்! 



-கவிஞர் மு.வா.பாலாஜி

ஓசூர்