கம்சாத்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு பிறகு ரஷ்யா, ஜப்பான் கடற்கரையை தாக்கிய சுனாமி
Aug 01 2025
113

டோக்கியா:
ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் கம்சாத்கா தீபகற்பத்தில் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் ஹொக்கைடோ தீவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வரலாற்றில் பதிவான 10 மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்று என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து கிழக்கு ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின. இது தொடர்பான காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் பரவின. ரஷ்யாவின் சகலின் பகுதியில் உள்ள குரில் தீவுகளில் பெருமளவு கடல்நீர் உட்புகுந்ததில் கட்டிடங்கள் நீரில் மூழ்கின. ஜப்பானின் பெரிய வடக்கு தீவான ஹொக்கைடோவில் துறைமுகங்கள் சேதம் அடைந்தன. இங்கு 4 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின.
முன்னதாக, ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் 3 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என அரசு எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஜப்பானில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதுபோல் ரஷ்ய கடலோரப் பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
குரில் தீவுகளை சுனாமி தாக்கியதை தொடர்ந்து வடக்கு குரில் மாவட்டத்தில் அதிகாரிகள் நேற்று அவசரநிலை பிரகடனம் செய்தனர். வடக்கு பசிபிக் பிராந்தியத்தை நேற்று சுனாமி அலைகள் தாக்கியதை தொடர்ந்து சீனா முதல் தெற்கு நியூசிலாந்து வரை கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமெரிக்காவில் ஹவாலி தீவில் இருக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். மேலும் ஓரிகான் எல்லை முதல் வடக்கு கலிபோர்னியா வரை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கைவிடுத்தது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?