news Breaking News
clock

இன்று உலக புற்றுநோய் தினம்.. ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்ய வேண்டியது என்ன?

இன்று உலக புற்றுநோய் தினம்.. ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்ய வேண்டியது என்ன?


 

உயிருக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கும் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் வலுவான உலகளாவிய முயற்சிகள் தேவை. எனவே, புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக 2000-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு, பிப்ரவரி 4-ம் தேதியை ‘உலக புற்றுநோய் தினமாக’அறிவித்தது. உலக அளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டுவதும், நோய் தடுப்புக்கான சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதும் இந்த நாளின் நோக்கம் ஆகும்.


அவ்வகையில் இந்த ஆண்டு உலக புற்றுநோய் தினம் இன்று (4-2-2026) கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.


அறிகுறிகள்

முறையான உணவுமுறை, உடற்பயிற்சி, பரிசோதனைகளை செய்வதன்மூலம் இந்த நோயின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும்.


திடீரென உடல் எடை குறைதல், தோலில் ஏற்படும் நிறமாற்றம், திடீர் கட்டிகள், தொடர்ந்து சோர்வு ஏற்படுதல், தொடர்ச்சியான இருமல், எந்த காரணமும் இன்றி வயிறு, முதுகு அல்லது மூட்டுகளில் ஏற்படும் அதீத வலி போன்றவை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, சாதாரண மருந்து மாத்திரைகளில் குணமடையாதபட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.


உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.


புற்றுநோய் காரணமாக 2020-ம் ஆண்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி நபர்கள் இறந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது.


 தமிழகத்தில் பாதிப்பு

தமிழகத்தில் உள்ள புற்றுநோய் நிலவரத்தைப் பொருத்தவரை சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அதில், தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2020ல் 68,750 ஆக இருந்த நிலையில், 2025-ல் ஒரு லட்சத்து 97 ஆக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 8,505 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7,295, வேலூர் மாவட்டத்தில் 6,525 என்ற அளவில் புற்றுநோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.


மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோயினால் கடந்த ஆண்டு மட்டும் 10,821 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 நோய்த்தடுப்பு நடவடிக்கை

புற்றுநோய் பாதிப்பானது மார்பகம், வாய், கர்ப்பப்பை, இரைப்பை, நுரையீரல், ரத்தம் என உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும். பெரும்பாலும் இது உடனடியாக வீரியம் அடைவதில்லை. படிபடியாக வீரியம் அடைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. சிலருக்கு ஆரம்பத்திலேயே அறிகுறிகள் தென்படும். எனவே, ஆரம்பகாலத்தில் கண்டறிந்து நோய்த்தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். புற்றுநோய் பாதிப்புக்கு மரபணு முக்கிய காரணமாக இருந்தாலும், வாழ்க்கை முறையும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. பலர் நோய் தீவிரமடைந்தபிறகே மருத்துவமனைக்கு செல்வதால் அவர்களுக்கான சிகிச்சை முறைகளும் கடுமையாகின்றன.


லேசான அறிகுறி தென்பட்டவுடன் ஆரம்பத்திலேயே நோயை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதுடன், சிகிச்சை சுமையையும் குறைக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News