tamilnadu epaper

அங்கோலா அதிபர் இந்தியா வருகை!

அங்கோலா அதிபர் இந்தியா வருகை!

அங்கோலா நாட்டின் அதிபர் 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.


தெற்கு ஆப்பிரிக்காவிலுள்ள அங்கோலா நாட்டின் அதிபர் ஜான் மானுவல் கோன்கால்வ்ஸ் லாரன்கோ, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பை ஏற்று அரசு முறைப் பயணமாக இன்று (மே.1) இந்தியா வருகின்றார்.


இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து இந்தப் பயணத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக் கூறப்படும் நிலையில் அங்கோலா நாட்டின் முக்கிய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், தொழில் பிரதிநிதிகள் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளுடன் அதிபர் லாரன்கோ இந்தியா வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தில்லி வந்தடையும் அதிபர் லாரன்கோவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் எனவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.


மே.1 முதல் மே.4 வரையிலான இந்தப் பயணத்தின் மூலம் பாரம்பரிய மருத்துவம், விவசாயம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


1985-ம் ஆண்டு முதல் இந்தியா, அங்கோலா நாட்டுடன் ராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளது. இதில், நிகழாண்டுடன் (2025) அந்த உறவுகள் 40 ஆண்டுகளை அடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.